ETV Bharat / state

பள்ளிக்கரணை ஆணவப்படுகொலை; 5 பேர் கைது - சகோதரர் அளித்த பரபரப்பு வாக்குமூலம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 25, 2024, 3:56 PM IST

Updated : Feb 25, 2024, 4:02 PM IST

Pallikaranai Honour killing: சென்னை பள்ளிக்கரணையில் நடந்த ஆணவப்படுகொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சகோதரியை திருமணம் செய்ததால் திட்டமிட்டு மதுபான பாருக்கு வரவழைத்து கொலை செய்தோம் என பெண்ணின் சகோதரர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Pallikaranai honour killing
பள்ளிக்கரணை ஆணவப்படுகொலை

சென்னை: பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனியார் மதுபானக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் வாசலில் நேற்று (பிப்.24) இரவு இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கத்தியால் தலை மற்றும் முகத்தில் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளனர். இது குறித்து அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், வெட்டுப்பட்டு கிடந்த இளைஞரை மீட்டு, சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், இறந்த நபர் பள்ளிகரணையைச் சேர்ந்த பிரவின்(26) என்பதும், கடந்த 4 மாதத்திற்கு முன்பு ஜல்லடையாம்பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில், பெண் வீட்டார் சம்மதமின்றி அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.

மேலும், வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த பிரவின் மற்றும் ஷர்மிளா சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதையடுத்து, பிரவின் மீது பெண் வீட்டார் கோபத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு பழிவாங்கும் நோக்கில், ஷர்மிளாவின் சகோதரரான தினேஷ், பிரவீனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதனையடுத்து, தனியார் மதுபானக் கூடத்தின் வாசலில் வைத்து, ஷர்மிளாவின் சகோதரர் தினேஷ் மற்றும் அவரின் நண்பர்கள் மூன்று பேர் பிரவீனை ஆணவப்படுகொலை செய்தது காவல் துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதைத் தொடர்ந்து, ஆணவக்கொலையில் ஈடுபட்டு தப்பியோடிய ஷர்மிளாவின் சகோதரர் ஜல்லடையான்பேட்டையைச் சேர்ந்த தினேஷ்என்ற குட்டி அப்பு (23), சித்தாலப்பாக்கத்தைச் சேர்ந்த விஷ்ணுராஜ் (25), ஸ்ரீபன்குமார் (24), பள்ளிகரணையைச் சேர்ந்த ஜோதிலிங்கம் (25), ஸ்ரீராம் (18) ஆகியோரை தனிப்படை காவல்துறையினர் மாம்பாக்கத்தில் வைத்து கைது செய்தனர்.

தொடர்ந்து ஆணவக்கொலையில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறை நடத்திய விசாரணையில், சகோதரியை எங்கள் சம்மதிமின்றி திருமணம் செய்ததால் திட்டமிட்டு நேற்று (பிப்.24) மதுபானக் கூடத்திற்கு வரவழைத்து வெட்டிக் கொலை செய்தோம் என ஷர்மிளாவின் சகோதரர் வாக்குமூலம் அளித்துள்ளார். காவல்துறையினர் கைது செய்யப்பட்டவர்கள் மீது கொலை மற்றும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னையில் காதல் திருமணம் செய்த இளைஞர் ஆணவப்படுகொலை; பெண்ணின் சகோதரர் உட்பட 4 பேர் கைது!

Last Updated :Feb 25, 2024, 4:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.