சென்னை: சென்னையில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் செல்லும், தாய் ஏர்வேஸ் (Thai Airways) பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளின் உடைமைகளை, சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து வந்தனர்.
அப்போது, தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா செல்வதற்காக வந்த சென்னையைச் சேர்ந்த பயணி ஒருவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அவரை நிறுத்தி அவரிடம் விசாரித்த போது, அவர் முன்னுக்குப் பின் முரணாகவும், மிகுந்த பதற்றத்துடன் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, அந்த பயணியின் உடைமைகளை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது அவரிடம் இருந்த சூட்கேசுக்குள் இருந்த ரகசிய அறையில் கட்டுக் கட்டாக இருந்த, அமெரிக்க டாலர், ஐரோப்பிய யூரோ, சவுதி ரியால் உள்ளிட்ட வெளிநாட்டு பயணங்களை கைப்பற்றினர். அதன் இந்திய மதிப்பு சுமார் 3 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.
அதனை அடுத்து, அந்த வெளிநாட்டுப் பணக்கட்டுகள் மற்றும் பிடிபட்ட பணியையும் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர், அந்த பயணியில் தாய்லாந்து பயணத்தை ரத்து செய்து, அவர் கடத்த முயன்ற வெளிநாட்டு பணங்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட பயணியை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பயணியிடமிருந்து, கைப்பற்றப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான வெளிநாட்டு பணம், கணக்கில் வராத ஹவாலா பணம் என்றும், இதன் மூலம் தாய்லாந்தில் இருந்து தங்கக் கட்டிகள், போதைப் பொருட்கள் உள்ளிட்டவை வாங்கி வருவதற்காக திட்டமிட்டு இருந்திருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
குறிப்பாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான வெளிநாடுகளின் பணக்கட்டுகளை பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், குறித்து, தேர்தல் நடைமுறைகளை கண்காணிக்கும் பறக்கும் படை மற்றும் வருமான வரித்துறை ஆகியவற்றுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: துபாயிலிருந்து சென்னைக்கு ரூ.7 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தல்.. 2 பெண்கள் கைது