ETV Bharat / state

தருமபுரம் ஆதீனம் விவகாரம்; பாஜக மாவட்டத் தலைவர் அகோரத்திற்கு 15 நாள் நீதிமன்றக் காவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 16, 2024, 7:51 PM IST

Dharmapuram Adheenam: தருமபுரம் ஆதீனத்திடம் பணம் கேட்டு மிரட்டிய விவகாரத்தில் கைதான பாஜக மாவட்டத் தலைவர் அகோரத்திற்கு 15 நாள் நீதிமன்றக் காவல் அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Mayiladurai
மயிலாடுதுறை

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன கர்த்தர் 27வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மீது அவதூறு பரப்பும் வகையில் ஆபாச ஆடியோ, வீடியோ உள்ளதாக கூறி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக, ஆதீனத்தின் சகோதரர் விருத்தகிரி கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில், தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் ஆடுதுறை வினோத், ஆதீனத்தின் நேர்முக உதவியாளர் செந்தில், சீர்காழி பாஜக முன்னாள் ஒன்றியச் செயலாளர் சம்பாகட்டளை விக்னேஷ், செம்பனார்கோவில் கலைமகள் பள்ளி தாளாளர் குடியரசு உள்ளிட்ட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் குடியரசு, விக்னஷ், வினோத், ஶ்ரீநிவாஸ் ஆகிய நான்கு பேரை கைது செய்து மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், 3 தனிப்படை அமைக்கப்பட்டு, வழக்கில் தொடர்புடைய எஞ்சிய நபர்களை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், பாஜக மாவட்டத் தலைவர் அகோரம் மும்பையில் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மயிலாடுதுறை குழந்தைகள் தடுப்பு குற்றப்புலனாய்வு காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையிலான 8 பேர் அடங்கிய தனிப்படை போலீசார், மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம் அலிபாக் நகரில் உள்ள நாகோன் பீச்சில் பாஜக மாவட்டத் தலைவர் அகோரத்தை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து அலிபாக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இந்த நிலையில், இன்று (மார்ச் 16) மயிலாடுதுறைக்கு அழைத்து வந்தனர். மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நீதிபதி இல்லாததால், திருச்சம்பள்ளியில் உள்ள தரங்கம்பாடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி கனிமொழி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

ஆஜராவதற்கு முன், தன்மீது போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளதாக அகோரம் குற்றம் சாட்டினார். இந்த வழக்கை விசாரனை செய்த நீதிபதி கனிமொழி, மார்ச் 28ஆம் தேதி வரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, போலீசார் அகோரத்தை மயிலாடுதுறை கிளைச்சிறையில் அடைத்தனர். பாஜக மாவட்டத் தலைவர் அகோரத்தை பார்ப்பதற்காக வந்த பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட பாஜகவினரை, போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

இவ்வழக்கில் அகோரம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயபிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பாஜகவிற்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளது. மேலும், அகோரம் நீதிபதியிடம், தான் ஒரு குற்றமும் செய்யவில்லை என்றும், வழக்கில் உள்ள ஒருவரிடமும் செல்போனில் கூட பேசவில்லை, தவறு செய்திருந்தால் எனக்கு உடனே தண்டனை கொடுங்கள் என்று கூறினார்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இப்தார் நோன்பு திறப்பின்போது வாக்கு சேகரிக்க கூடாது.. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.