ETV Bharat / state

சென்னையில் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை! - Chennai Pub accident

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 28, 2024, 9:15 PM IST

Updated : Mar 28, 2024, 10:14 PM IST

Chennai Pub ceiling falling: சென்னையில் கேளிக்கை விடுதி ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்திருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் செயல்பட்டு வரும் கேளிக்கை விடுதி கட்டடம், மூன்று மாடிகளைக் கொண்டது. இந்த நிலையில், இன்று இந்த கட்டடத்தில் உள்ள முதல் தளத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் உயிரிழந்திருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியார் மதுபானக் கூடம் இயங்கி வருகிறது. இதில் இன்று இரவு சுமார் 8.30 மணியளவில் மதுபான கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அபிராமிபுரம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த மூவரை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வரவவழைக்கப்பட்டு, இடிபாடுகளில் சிக்கிய மூன்று பேர் உடலை மீட்டனர். இதையடுத்து, மூன்று பேர் உடலையும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து அபிராமிபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட தகவலில், மணிப்பூரைச் சேர்ந்த லாலி (22), மேக்ஸ் (21) மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சைக்கிலோன் ராஜ் (45) ஆகியோர் உயிரிழந்தவர்கள் என்பவதும், மூவரும் மதுபான விடுதியில் பணிபுரிந்து வருவதும் தெரிய வந்துள்ளது. மேலும், விபத்து நடந்த மதுபானக் கூடம் உரிய அனுமதி பெற்று நடத்தி வந்ததும், தற்போது ஐபிஎல் போட்டிகள் பார்ப்பதற்கான சலுகைகள் உடன் இந்த மதுபானக்கூட ம்நடத்தப்பட்டு வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

மேலும், இன்று இரவு ஐபிஎல் போட்டிகளை மதுபானக் கூடத்தில் பார்ப்பதற்கு ஏராளமானவர்கள் புக் செய்ததாகவும், இந்த நிலையில் எதிர்பாராத விதமாக இந்த விபத்து நடைபெற்று இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், மதுபானக் கூடத்தின் அருகே மெட்ரோ ரயில் சுரங்கம் அமைக்கக்கூடிய பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதன் காரணமாக ஏதாவது விபத்து நடந்ததா உள்பட பல்வேறு கோணங்களில் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், விபத்து நடந்த இடத்திற்கு சென்னை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு, விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், இது தொடர்பாக சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா அளித்த பேட்டியில், “மேலும் மூன்று பேர் சிக்கி உள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

விபத்து குறித்து அபிராமபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக மேற்கூரை இடிந்து இதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனியார் விடுதிக்கு வெளியே மூன்று ஆம்புலன்ஸ்கள் விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையச் சேர்ந்த 40 பேர் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கி மூன்று பேர் மாட்டிக் கொண்டனர். அதில் இருவரது உடல் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மீதம் உள்ள நபர்களின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள், இடிபாடுகளில் வேறு யாராவது சிக்கி உள்ளார்களா என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: வெளிநாட்டு சுற்றுலா மோசடி; கொடைக்கானலில் 2 பெண்கள் உள்பட 7 பேர் கைதானதன் பின்னணி என்ன? - Abroad Tour Fraud

Last Updated :Mar 28, 2024, 10:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.