ETV Bharat / state

“சூர்யமூர்த்தி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி பதில்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 13, 2024, 7:37 PM IST

Irattai Ilai issue: இரட்டை இலை விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பிய நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து பதில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை
chennai

சென்னை: வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது என திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர், தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்திருந்தார். அந்த மனுவில், “அதிமுகவின் உட்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சி சட்ட திட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டது தொடர்பாகவும், தேர்தல் ஆணையத்திற்கு 2017 முதல் 2022ஆம் ஆண்டு வரை புகார்கள் அளித்துள்ளேன்.

உட்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்னை தொடர்பாக தாக்கல் செய்திருக்கும் உரிமையியல் வழக்குகளில் இறுதி தீர்ப்பு வரும் வரை, அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது” எனத் தெரிவித்திருந்தார். ஆனால், இவர் அளித்த மனு மீது தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்பட்டது.

அதனால் சூர்யமூர்த்தி, தான் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு, வரும் 25ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனைத் தொடர்ந்து, சூர்யமூர்த்தி அளித்த மனு மீது பதிலளிக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில்தான் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து பதில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த பதில் மனுவில், "அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் தன்னை அங்கீகரித்துள்ளது. நீதிமன்றத்திலும் இது தொடர்பான உத்தரவு உள்ளது. அதனால் சூரிய மூர்த்தி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பொன்முடி எம்எல்ஏவாக தொடர்வார்.. அமைச்சராக பதவியேற்கவும் ஆளுநருக்கு கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.