திருப்பத்தூர்: நாடாளுமன்றத் தேர்தல் ஏப்.19ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரக் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், நேற்று (திங்கட்கிழமை) வேலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் மருத்துவர் பசுபதியை ஆதரித்து, பள்ளிகொண்டா கந்தனேரி பகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, நேற்று இரவு திருப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்தார்.
மேலும், திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக கலியபெருமாள் போட்டியிடும் நிலையில், அவரை ஆதரித்து இன்று காலை (செவ்வாய்க்கிழமை) திருப்பத்தூர் சக்தி நகர்ப் பகுதியில் உள்ள தினசரி மார்கெட்டில், காய்கறி வியாபாரிகளிடம் தங்களது குறைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது துண்டுப் பிரசுரங்களை வழங்கி எடப்பாடி பழனிசாமி, வேட்பாளர் கலியபெருமாளை நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். மேலும், அதில் ஒரு பெண்மணி, மீண்டும் நீங்கள் முதலமைச்சராக வந்தால் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் எனவும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விலைவாசி உயர்வு அதிகமாகி விட்டதாகவும், அதிமுக ஆட்சியில் இருக்கும் போது விவசாயிகள் பயனடையும் வகையில் பல்வேறு நலத் திட்டங்கள் செய்ததாகவும் தெரிவித்தார்.