ETV Bharat / state

அழிவை நோக்கிச் செல்கிறதா தாமிரபரணி ஆறு? சூழலியல் ஆய்வாளர்கள் முன்வைப்பது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 24, 2024, 3:49 PM IST

Thamirabarani River: தமிழகத்தின் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி நதியை பாதுகாத்து வரும் மீன் இனங்கள், நதியில் கலக்கும் கழிவுகள் காரணமாக அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பது நதியின் அழிவுக்கு வழிவகுப்பதாக ஆய்வாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ஈடிவி பாரத் வாயிலாக விளக்குகிறது இந்த விரிவான தொகுப்பு.

Ecologists have said that the Thamirabarani river is heading for extinction
தாமிரபரணி நதி அழிவை நோக்கிக் செல்வதாக சூழலியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

தாமிரபரணி நதி அழிவை நோக்கிக் செல்வதாக சூழலியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

திருநெல்வேலி: தமிழகத்தின் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி நதி, திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்குதொடர்ச்சிமலையின் ஒரு பகுதியான பொதிகை மலையில் உற்பத்தி ஆகிறது. அடர்ந்த காடுகளுக்கு நடுவே மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி நதி, சுமார் 15 கி.மீ தூரம் வனப்பகுதியைக் கடந்து பாபநாசம், காரையாறு, மணிமுத்தாறு, சேர்வலாறு ஆகிய அணைகளைத் தழுவி, நகருக்குள் பாய்ந்து ஓடுகிறது.

திருநெல்வேலி வழியாக தூத்துக்குடி மாவட்டத்தைக் கடந்து புன்னக்காயல் என்ற கடற்கரைப் பகுதியில் தாமிரபரணி ஆறு கலக்கிறது. பொருநை நதி என்று அழைக்கப்படும் தாமிரபரணி நதி, பல்வேறு வரலாற்று பாரம்பரியங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. குறிப்பாக, பொருநை ஆற்றங்கரை நாகரிகம், 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த நாகரிகம் என பல்வேறு ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

இது போன்ற பெரும் முக்கியத்துவம் வாய்ந்த தாமிரபரணி நதி, திருநெல்வேலி மட்டுமல்லாது தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற அண்டை மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளை பூர்த்தி செய்கிறது. மேற்கண்ட அணைகளுக்கு கீழ் கோடை மேலழகியான் கால்வாய், கண்ணடியன் கால்வாய், பாளையங்கால்வாய் உள்பட மொத்தம் எட்டு கால்வாய்களைக் கடந்து, சுமார் 180 குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது.

தாமிரபரணி நதியை நம்பி சுமார் 86 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பயன் பெறுகின்றன. இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட தாமிரபரணி நதி, சமீப காலமாக மாசடைந்து வருவது, இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நகர்ப் பகுதியில் மாநகராட்சியின் சரியான திட்டமிடல் இல்லாத பாதாளச் சாக்கடைத் திட்டத்தால், குடியிருப்புகளின் கழிவுகள் நேரடியாக ஆற்றில் கலப்பதாக புகார் எழுந்துள்ளது.

மேலும், தொழில் நிறுவனக் கழிவுகள், வாகனக் கழிவுகள் உள்பட பல்வேறு வகையான கழிவுகள் ஆற்றில் கலப்பதால், தாமிரபரணி ஆற்று நீர், தற்போது குடிக்கும் தன்மையை இழந்து வருவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. எனவே குளிக்கும் தரத்தில் இருக்கும் தாமிரபரணி ஆற்றை குடிக்கும் தரத்திற்கு மாற்ற வேண்டும் என பலகட்ட முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

தாமிரபரணி நதி உற்பத்தியாகும் பொதிகை மலையில், ஒரு சதவிகிதம் கூட கழிவுகள் கலக்காமல், முழுக்க முழுக்க தூய்மையான நீராகவே கீழிறங்கி வருகிறது. ஆனால், மக்கள் வசிக்கும் பகுதிகளைக் கடக்க கடக்க, ஆறு முழுமையாக மாசடைவதைக் காண முடிகிறது. இது போன்ற நிலையில், தாமிரபரணி ஆற்றில் வாழும் மீன் இனங்கள் குறித்தும், அவற்றால் நதி நீர் பாதுகாக்கப்படுவது குறித்தும், அகத்தியர் மலை காப்பகம் அமைப்பு சார்பில் பல்வேறு ஆராய்ச்சி மாணவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தாமிரபரணியின் மீன் வகைகள், அவற்றின் தற்போதைய சூழல் குறித்த விரிவான கருத்தரங்கம், திருநெல்வேலி ரஹ்மத் நகரில் செயல்பட்டு வரும் சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் நடைபெற்றது. அகத்தியர் மலை காப்பகம், மாவட்ட நிர்வாகம், இயற்கை அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்திய இந்த கருத்தரங்கில், தாமிரபரணி நதி மற்றும் அதனுடைய தற்போதைய நிலை குறித்து விரிவாக பேசப்பட்டது.

முக்கியமாக, தாமிரபரணி நதியில் இருக்கும் மீன் வகைகளும், அவற்றின் பாதுகாப்பு உள்ளிட்டவைகள் குறித்தும் விரிவாகப் பேசப்பட்டது. தற்போது தாமிரபரணி ஆற்றில் கலக்கும் ஆலைக் கழிவுகள், திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் பெரும்பாலான பகுதிகளில் இருக்கும் பேராபத்தை விளைவிக்கும் கழிவுகள் காரணமாக, தாமிரபரணி மிகப்பெரிய ஆபத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

இந்த சூழலில், தாமிரபரணி நதி குளிக்கும் தரத்திற்காவது இருப்பதற்கும், தாமிரபரணி நதி முழுமையாக மாசடையாமல் பாதுகாப்பதில் மறைமுகமாக உதவி செய்து கொண்டிருப்பதும் மீன்கள்தான் என ஆய்வாளர்கள் இக்கருத்தரங்கில் தெரிவித்துள்ளனர்.

128 கிலோ மீட்டர் தொலைவு பயணிக்கும் தாமிரபரணி ஆற்றில், சுமார் 125 வகையான இயல் மீன் வகைகள் இருப்பதாகவும், மிகப்பெரிய வளமான இந்த மீன்கள், தற்போது தாமிரபரணி ஆற்றின் மோசமான நிலையால், அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

தாமிரபரணி ஆற்றின் இயல் மீன் வகைகளால்தான் தாமிரபரணி நதி பாதுகாக்கப்பட்டு வருவதாகவும், அந்த மீன்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை சமகாலத்தில் எழுந்துள்ளதாகவும் சூழியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக தாமிரபரணி நதியில் இருக்கும் இயல் மீன் வகைகள், ஆப்பிரிக்க வகை கெளுத்தி மீன்களால் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சூழலில்தான் மீன்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை மற்றும் எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக பேசப்படுவதாகவும், வரும் மார்ச் மூன்றாம் தேதி முதல் தாமிரபரணி நதியில் இருக்கும் மீன்கள் குறித்த கணக்கெடுப்பைத் திட்டமிட்டு உள்ளதாகவும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.

மேலும், தாமிரபரணி நதியை மறுசீரமைப்பதில் பல்வேறு சவால்கள் இருந்து வருவதாகவும், இதுவரை தாமிரபரணி நதிக்காக அரசு ஒதுக்கிய நிதி முறையாக செலவிடப்படவில்லை எனவும் தெரிவித்தார். தொடர்ந்து, நதியைச் சார்ந்து 100க்கும் மேற்பட்ட இயல் மரங்கள் செடிகள் இருந்த நிலையில், அவற்றில் பல அழிந்து விட்டதாகவும் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்; தீட்சிதர் குழுவுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.