ETV Bharat / state

"மத்திய, மாநில அரசு நாடாளுமன்றத் தேர்தலில் தில்லுமுல்லு செய்ய முயல்வார்கள்" - பிரேமலதா விஜயகாந்த் பேச்சு! - lok sabha election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 2, 2024, 8:38 PM IST

Updated : Apr 2, 2024, 10:39 PM IST

Lok Sabha Election 2024: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவினர் 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற மாட்டார்கள் என கருத்துக் கணிப்பு கூறுகிறது என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சார கூட்டத்தில் பேசினார்.

lok sabha election 2024
lok sabha election 2024

புதுக்கோட்டை: திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் கருப்பையாவை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன் வேட்பாளர் கருப்பையா மற்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

பிரச்சாரத்தின் போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், இந்த கூட்டணி வெற்றி கூட்டணி இயல்பான கூட்டணி. கடந்த காலத்தில் ஜெயலலிதாவும் விஜயகாந்த்தும் இணைந்து தேர்தலில் சந்தித்தார்கள் அப்போது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றோம்.

அதேபோன்று இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமியுடன் நானும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறேன். இந்த தேர்தலும் நமக்கு வெற்றியாக அமையும். வாக்காளர்கள் ஒவ்வொருவரும் காலையிலேயே எழுந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்.

ஏனென்றால் திமுகவினர் நம்ம ஓட்டை கள்ள ஓட்டுப் போட்டு விடுவார்கள் அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. அதேபோன்று மத்தியில் பாஜகவிற்கு 400 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 200 இடங்களுக்கு மேல் பாஜகவிற்கு கிடைக்காது என்று கருத்துக் கணிப்புகள் கூறுகிறது.

எனவே, மத்தியில் ஆளும் பாஜக அரசும், மாநிலத்தில் ஆளும் திமுகவும் தில்லுமுல்லு செய்து வெற்றி பெறுவதற்கு முயற்சி செய்வார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. அதேபோன்று போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. போதைப் பொருளின் கூடாரமாகத் தமிழகம் மாறி உள்ளது.

இதனை நாம் மாற்ற வேண்டாமா? அதற்கு எடப்பாடி பழனிசாமியும், நானும் அமைந்த கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்கு வாக்காளர்கள் ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்த தேர்தல் வரும் 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் அதற்கு முன்னதாக நடக்கும் உள்ளாட்சி ஊரக தேர்தலுக்கும் முன்னோட்டமாக இருக்கும். எனவே நான் இதில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்றார்.

முன்னதாக, வேன் மூலமாகப் பிரச்சாரம் செய்ய வந்த பிரேமலதாவுக்கு தேமுதிகவினர் 50க்கும் மேற்பட்டோர் பூசனிக்காய் மற்றும் தேங்காயில் சூடம் ஏற்றிச் சுற்றி சாலையில் உடைத்து திருஷ்டியைக் கழித்தனர். மேலும் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடந்தது. அதற்கு ஏற்றவாறு தொண்டர்களும் நடனமாடி மகிழ்ந்தனர்.

இதையும் படிங்க: உபியில் பள்ளிப் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 4 மாணவர்கள் உயிரிழப்பு! - UP School Bus Accident

Last Updated :Apr 2, 2024, 10:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.