ETV Bharat / state

அல்வாவுடன் மாமன்ற கூட்டத்துக்கு வந்த கவுன்சிலர்கள்! இரவு வரை கூட்டம் நீடித்ததன் பின்னணி என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2024, 10:41 PM IST

Nellie Corporation Council meeting: நெல்லையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்திற்கு கவுன்சிலர்கள் அல்வா மற்றும் குப்பையுடன் வந்தது சலசலப்பை ஏற்படுத்தியது.

Nellie Corporation Council meeting
Nellie Corporation Council meeting

Nellie Corporation Council meeting

திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. திமுக 4, 7 மற்றும் 8-வது வார்டு உறுப்பினர்களான வசந்தா, இந்திரா மற்றும் மேரி குமாரி ஆகிய மூன்று பேரும் தங்கள் பகுதியில் சீர்திருத்த பணிகளுக்கு ஒப்பந்தம் விடும் பணி நடைபெறாத காரணம் என்ன? மக்களுக்கும் மாமன்ற உறுப்பினர்களுக்கும் அல்வா கொடுப்பதற்கான காரணம் என்ன? என்ற வாசகங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தியபடி கூட்டத்திற்கு வந்தனர்.

மேலும், அவர்கள் அல்வா மற்றும் குப்பைகளைத் தட்டுகளில் எடுத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைத்து கவுன்சிலர்களும் தங்களது பகுதிகளில் எந்த சீர்திருத்தப் பணியும் நடைபெறவில்லை என்று கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வழக்கமாகக் கூட்டம் தொடங்கியவுடன் தீர்மானங்களை முன்வைத்து பொருள் விளக்கத்தை மேயர் ஓரிரு வரியில் கூறி கூட்டத்தை நிறைவு செய்வார்.

தீர்மானம் மீது ஒரு சில கவுன்சிலர்கள் மட்டுமே தங்களது விமர்சனங்களை முன்வைப்பர். ஆனால் கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களின் பொருள் மீதும் தனித்தனியாக கவுன்சிலர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர். மேலும் மக்கள் பிரச்சனைகளை கவுன்சிலர்கள் தனித்தனியாகப் பேசுவார்கள் அதற்குப் பதில் அளிக்க வேண்டும் என கவுன்சிலர் பவுல்ராஜ் கூறினார்.

சுமார் 5 மணி நேரம் வரை இந்த கூட்டம் நீடித்தது. வழக்கமாக இது போன்ற மாமன்ற கூட்டம் அதிகபட்சம் ஒரு மணி நேரத்தில் முடிந்து விடும். ஆனால், இரவு 10:00 மணி வரை கூட்டம் நீடித்தது. ஒரு கட்டத்தில் மேயர், ஆணையர் உள்பட அனைவரும் சோர்வானதால் இடையில் கூட்டத்தை நிறுத்திவிட்டு தேநீர் அருந்தச் சென்றனர்.

அதன் பின்னர் மீண்டும் கூட்டம் தொடங்கியது சரியாக இரவு 10:15 மணிக்குக் கூட்டம் முடிவு பெற்றது. ஏற்கனவே நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனுக்கும் ஆளுங்கட்சி கவுன்சிலர்களுக்கும் இடையே பல மாதங்களாக மோதல் போக்கு நீடித்து வருவதாகவும், இதனால் திமுக தலைமை பலமுறை கவுன்சிலர்களை எச்சரித்து ஒற்றுமையோடு செயல்படும்படி கூறி குழு ஒன்றை அமைத்து கவுன்சிலர்களை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனாலும் கவுன்சிலர்கள் தொடர்ச்சியாக மேயருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் சமீபத்தில் கொண்டு வந்தனர். அதன் பின்னர் திமுக தலைமை, கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியது.

இந்த பேச்சுவார்த்தையின் வெளிப்பாடாக, தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொள்ளாததால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்தது. இந்த சர்ச்சைகளுக்குப் பிறகு நெல்லையில் நடைபெற்ற முதல் மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராகச் செயல்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திமுக வட்ட செயலாளர் கொலை வழக்கு: பிடிஆணையில் தலைமறைவான 3 பேர் கைது - சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.