ETV Bharat / state

மகளைக் கொன்ற தாய் தற்கொலை..முதல் 'ஐஆர்சிடிசி' ஆப் இணையம் மூலம் ரூ.1 லட்சம் அபேஸ்! வரை சென்னை குற்றசெய்திகள்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 2, 2024, 9:16 AM IST

chennai crime news: திருமணம் செய்து கொள்வதாகக் கூறி செவிலியரை ஏமாற்றிய முதல் நிலை காவலர் கைது முதல் ஐஆர்சிடிசி உதவி எண் மூலம் வங்கிக் கணக்கில் ரூ.1.8 லட்சம் திருடப்பட்டது வரை சென்னையில் நடைபெற்ற குற்றச் செய்திகளின் தொகுப்பு

chennai crime news
சென்னை குற்றச்செய்திகள்

சென்னை: வளசரவாக்கம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக தம்பிதுரை பணியாற்றி வருகிறார். நந்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இவர், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, அதே பகுதியைச் சேர்ந்த ஒரு செவிலியர் வேலை செய்துவரும் இளம்பெண் உடன் ஒரு வருடமாக பழகி வந்துள்ளார்.

இதனிடையே, சேலம் மாவட்டத்தில் வேறொரு பெண்ணுடன் தம்பிதுரைக்கு ஏற்கனவே, திருமணம் ஆகியிருப்பது இளம்பெண்ணிற்கு தெரியவந்துள்ளது. உடனே தன்னை தம்பிதுரை ஏமாற்றி வருவதாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில், வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு புகார் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் இளம்பெண்ணை தம்பிதுரை ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து காவலர் தம்பிதுரையை கைது செய்து, அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், ஏமாற்றுதல் உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடலில் மாட்டிக்கொண்ட ஊசி: சென்னை பாடி பகுதியைச் சேர்ந்தவர் யோகோ சந்துரு. இவரது மகன் கல்லூரியில் பயின்று வருகிறார். இந்நிலையில், கடந்த ஜன.10 ஆம் தேதி சந்துரு மகன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, காலில் இரும்பு கம்பி கிழித்து காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சந்துருவின் மனைவி, தனது மகனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு டிடி (DD Injection) தடுப்பூசி போடுவதற்காக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அங்கு பணியிலிருந்த செவிலியர் அவருக்குத் தடுப்பு ஊசி போடும்போது சிரஞ்சில் இருந்த ஊசி உடைந்து உடலிலே சிக்கிக்கொண்டது.

உடனடியாக மருத்துவர் அருகில் உள்ள ஸ்கேன் சென்டருக்கு அழைத்துச் சென்று, ஸ்கேன் செய்து பார்த்தபோது உடலில் ஊசி மாட்டிக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சந்துருவின் மனைவி, உடனே சிறுவனை அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

பின்னர் 3 மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பின், சிறுவனின் காலிலிருந்த ஊசி அகற்றப்பட்டது. இது சம்பந்தமாக கொரட்டூர் காவல் நிலையத்தில் கடந்த ஜன.11ஆம் தேதி சந்துரு புகார் அளித்தார். புகார் அளித்துப் பல நாட்கள் ஆகியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சந்துரு வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவனின் பெற்றோர், "தடுப்பூசியைச் செலுத்தத் தெரியாமல் பணி செய்ததால் ஊசி உடைந்து உடலில் சிக்கிக் கொண்டது. உடனடியாக அந்த மருத்துவமனையின் மருத்துவரை அழைத்து நடந்தது தொடர்பாக எழுதிக் கொடுக்குமாறு கேட்டு பின்னர் அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று 3 மணி நேர அறுவைசிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். அப்போது விசாரணை மேற்கொண்ட ஆய்வாளரிடம் செவிலியர் செய்த தவற்றை ஒப்புக்கொண்ட நிலையிலும், காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யாமலும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர். மேலும் சம்பந்தப்பட்ட மருத்துவர் மற்றும் செவிலியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பதாகவும்" தெரிவித்தனர்.

மகளைக் கொன்று தாய் தற்கொலை: புளியந்தோப்பு பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது மகளுடன் வசித்து வந்தவர், காயத்ரி. இவருக்கு முதல் திருமணம் ஆகி கணவன் பிரிந்து விட்ட நிலையில், இரண்டாவது கணவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் காயத்ரியின் இரண்டாவது கணவரும் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டுப் பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால், காயத்திரி கடும் மனஉளைச்சலில் வாழ்ந்து வந்துள்ளார். அதோடு மட்டுமின்றி மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகளை வைத்துப் பார்த்துக்கொள்ள முடியாமல் சிரமப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தனது 14 வயது மனநலம் பாதிக்கப்பட்ட மகளுக்கு விஷம் கலந்த உணவை அளித்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த புளியந்தோப்பு போலீசார் சம்பவ இடத்தில் அவர்களது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வங்கிக்கணக்கில் பணம் கொள்ளை: வடபழனி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவர் தனது ரயில் டிக்கெட்டை ரத்து செய்வதற்காக ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளத்திலிருந்த உதவி மைய தொலைப்பேசி எண்ணுக்கு அழைத்துள்ளார்.

அப்போது ஸ்ரீதரன் உடன் எதிர்முனையில் பேசிய நபர் வங்கி மற்றும் ஏடிஎம் கார்டு விவரங்களைக் கேட்டுள்ளார். இதனையடுத்து ஸ்ரீதரன் வங்கி விவரங்கள் குறித்து கூறிய நிலையில், அவரது வங்கி கணக்கிலிருந்த ரூ.1.8 லட்சம் பணம் திருடப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீதரன், இது குறித்து வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், விசாரணை மேற்கொண்டபோது ஐஆர்சிடிசி இணையதளத்தில் பதிவிடப்பட்டிருந்த தொலைப்பேசி எண் ரயில்வே நிர்வாகத்தால் பதிவிடப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஊடுருவல் நடைபெற்றுள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: “சாதி மதமற்றவர் சான்றிதழ் வழங்க அதிகாரம் இல்லை”.. தமிழக அரசு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.