ETV Bharat / state

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உடற்தகுதி சான்றைச் சமர்ப்பிக்க வலியுறுத்த முடியுமா? - தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 5:20 PM IST

Chennai High Court: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், மக்கள் கடமையாற்றுவதற்கான உடற்தகுதியைப் பெற்றிருக்கின்றனரா எனக் கேட்க முடியுமா? என்பது குறித்து விளக்கமளிக்கத் தேர்தல் ஆணையத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

candidates-contesting-the-election-be-insisted-on-submitting-the-fitness-certificate-chennai-high-court
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உடற்தகுதி சான்றைச் சமர்ப்பிக்க வலியுறுத்த முடியுமா? - தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க உத்தரவு!

சென்னை: தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, சொத்து விவரம், குற்ற வழக்குகள் பற்றிய தகவல்களைத் தாக்கல் செய்வதோடு, 30 நாட்களுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை அறிக்கையுடன், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி கோவையைச் சேர்ந்த எஸ்.வி.சுப்பையா என்பவர் 2016ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று (பிப்.15) விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், வேட்பாளர்களின் உடல் நிலை குறித்து பரிசோதனை அறிக்கை என்பது சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட அந்தரங்க விஷயம் என்பதால், அந்த விவரங்களைக் கேட்க முடியாது என விளக்கமளித்தார்.

மேலும், இது சம்பந்தமாக விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், மருத்துவ பரிசோதனை அறிக்கையைச் சமர்ப்பிக்க அறிவுறுத்த வேண்டுமானால், அதுகுறித்து சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன், தான் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதியின் உடல் நிலையைத் தெரிந்து கொள்ள வாக்காளர்களுக்கு உரிமை உள்ளது. மருத்துவ காப்பீடு பெற மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை அளிக்கும் நிலையில், வேட்பாளர்களுக்கு ஏன் வலியுறுத்தக் கூடாது என வாதிட்டார்.

இதையடுத்து, வேட்பாளருக்கு இருக்கும் நோய்கள் பற்றித் தெரிவிக்கும்படி வற்புறுத்த முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், அரசியல் சாசன பதவிகளை வகிப்பவர்கள், உடற்தகுதி சான்று சமர்ப்பிக்க வேண்டியுள்ளது என்பதால், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், கடமையாற்றுவதற்கான உடற்தகுதியைப் பெற்றிருக்கிறார்களா? என்பது குறித்த சான்றைப் பெறலாம் என யோசனை தெரிவித்தனர்.

பின்னர், உடற்தகுதி சான்றைச் சமர்ப்பிக்க வலியுறுத்த முடியுமா என்பது குறித்து விளக்கமளிக்கும்படி தேர்தல் ஆணைய வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணியில் களமிறங்கிய சர்ஃப்ராஸ் கான்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.