ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனையில் பல்நோக்கு உயர் சிகிச்சை பிரிவுகளுக்காக, ரூ.64 கோடி மதிப்பீட்டில் 8 மாடிகள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொள்ளாச்சியில் இருந்து காணொலி மூலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசினார். அப்போது, "பிரதமர் நரேந்திர மோடி சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார். எப்படியாவது தமிழக மக்களை மயக்கி, அவர்களின் வாக்குகளை பெற்று விடலாம் என அடிக்கடி தமிழகம் வந்து செல்கிறார்.
நாட்டு மக்களை தனது குடும்பம் என கூறும் பிரதமர் மோடிக்கு சவால் விடுகிறேன், தமிழகத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் நின்று டெபாசிட் வாங்கட்டும். அப்போது அவரை பிரதமராக ஏற்றுக் கொள்கிறேன். சிஏஏ சட்டத்தை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் தூக்கி எரியப்படும். மோடி பேசுவதிலும் எந்த அர்த்தமும் இல்லை. மோடியைப் பற்றி மற்றவர்கள் பேசுவதிலும் எந்த அர்த்தமும் இல்லை" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "காங்கிரஸ் சார்பாக இரண்டு வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
போதைப்பொருள் நடமாட்டம் முன்பு அமைச்சராக இருந்த அரங்கசாமி காலத்தில் இருந்து இருக்கிறது. அதை அப்போது அதிமுக தடுக்க தவறிவிட்டது. தற்போது தொடர் நடவடிக்கை எடுத்துக்கொண்டு இருக்கின்ற காரணத்தினால்தான், பலர் பிடிபட்டு கொண்டிருக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோவை அரசு மருத்துவமனையில் 26 கட்டண படுக்கையறைகள் திறப்பு!