ETV Bharat / state

ஆட்டோவில் நகையை தவறவிட்ட மூதாட்டி.. அடகு வைத்த ஓட்டுநர்.. போலீசார் அதிரடி! - gold jewellery missing auto

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 16, 2024, 4:34 PM IST

Gold jewellery missing auto: சோழிங்கநல்லூரில் ஆட்டோவில் மூதாட்டி தவறவிட்ட 12 சவரன் தங்க நகையை அடகு கடையில் வைத்து பணமாக்கிய ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆட்டோ ஓட்டுநரை கைது செய்த போலீசார் புகைப்படம்
ஆட்டோ ஓட்டுநரை கைது செய்த போலீசார் புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: ஆட்டோவில் பயணித்த மூதாட்டி தவறவிட்ட தங்க நகையை ஆட்டோ ஓட்டுநர் அடகு வைத்து பணமாக்கிய சம்பவம் குறித்து செம்மஞ்சேரி போலீசார் ஆட்டோ ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், “சென்னை மண்ணடியைச் சேர்ந்தவர் மார்கிரேட் (64) என்ற மூதாட்டி. இவரும், அவரது உறவினரும் கடந்த மே 5ஆம் தேதி அன்று சோழிங்கநல்லூரில் உள்ள அவரது மகள் வீட்டிற்குச் சென்றுள்ளனர். பாரிமுனையில் இருந்து அரசுப் பேருந்தில் வந்த இருவரும், சோழிங்கநல்லூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மகள் வீட்டிற்கு ஆட்டோவில் சென்றுள்ளனர்.

இறங்க வேண்டிய இடம் வந்தவுடன், மூதாட்டி தான் கொண்டு வந்த பையை மறந்து ஆட்டோவில் விட்டுச் சென்றுள்ளார். அதில், அவர் தனது மகளிடம் கொடுப்பதற்காக 12 சவரன் தங்க நகையைக் கொண்டு வந்துள்ளார். மகளின் வீட்டிற்குச் சென்று மூதாட்டி பார்க்கையில் பையைக் காணவில்லை. தங்க நகை உள்ள பையை மறந்து ஆட்டோவில் வைத்துவிட்டதை அறிந்த பாட்டி ஆட்டோ குறித்த விபரம் தெரியாததால், இது குறித்து செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளர் பிரபுவிடம் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் பிரபு தலைமையில், உதவி ஆய்வாளர் ராஜு, தலைமைக் காவலர் யாசர் அரபாத், முதல்நிலை காவலர் நித்தியானந்தம், இரண்டாம் நிலை காவலர் ரவி உள்ளிட்டோர் அடங்கிய ஒரு தனிப்படை அமைத்து, ஆட்டோ யாருடையது? ஓட்டுநர் யார்? என்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதில் ஒரு ஆட்டோ மட்டும் அதிவேகமாக சென்றதால், அதன் பதிவு எண் கிடைப்பது சவாலாகவே இருந்துள்ளது.

இதனையடுத்து, 10 நாட்களாக போராடி ஆட்டோவின் பதிவு எண்ணைக் கண்டுபிடித்த போலீசார், அதன் அடிப்படையில் சென்னை கண்ணகி நகரின் எழில் நகரைச் சேர்ந்த பாண்டியன் (67) என்பவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்துள்ளனர்.

விசாரணையில், ஆட்டோ ஒட்டுநர், “ஆட்டோவில் பயணித்தவர்கள் தவறவிட்ட பையை திறந்து பார்க்கையில், அதில் தங்க நகை இருந்தது. அதை நேர்மையாக திருப்பிக் கொடுக்கலாம் என்று பார்த்தேன். ஆனால், என்னுடைய வறுமை மற்றும் கடன் தொல்லை காரணமாக அதை திருப்பித் தராமல் எடுத்துக் கொண்டேன்.

மேலும், எனது மனைவியின் மருத்துவச் செலவிற்கு பணம் தேவைப்பட்டதாலும், இரண்டு மாதம் வீட்டு வாடகை மற்றும் மூன்று மாதம் ஆட்டோ தவணை கட்டாமல் இருந்த நிலையில், ஆட்டோவில் தவற விட்ட தங்க நகையை நான் எடுத்துச் சென்று அடகு கடையில் வைத்து என்னுடைய செலவுகளை முடித்துக் கொண்டேன்” என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து, ஆட்டோ ஓட்டுநர் நகையை அடகு வைத்த கடைக்குச் சென்ற போலீசார், மூதாட்டி தவறவிட்ட 12 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, ஆட்டோ ஓட்டுநர் பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்த செம்மஞ்சேரி குற்றப்பிரிவு போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்டு மீது மேலும் ஒரு வழக்கு.. நேதாஜி பேரவை அளித்த புகார் என்ன? - SAVUKKU SHANKAR

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.