ETV Bharat / state

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 60 நாட்கள் வரை புத்தகங்களை இரவலாக எடுத்துச் செல்ல அனுமதி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 11, 2024, 9:31 PM IST

Updated : Mar 11, 2024, 10:58 PM IST

Anna Centenary Library: அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் "நூல் இரவல் சேவை" மூலம் உறுப்பினர்கள் 60 நாட்கள் வரை புத்தகங்களை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Anna Centenary Library
Anna Centenary Library

Anna Centenary Library

சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் கடந்த 2010ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் கட்டப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டது. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகும்.

இந்த நூலகத்தில் குழந்தைகள் முதல் இளைஞர்கள் ஆராய்ச்சிக்குத் தேவையான அனைத்துப் புத்தகங்களும் உள்ளன. ஆனால் அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்ட பின்னர் உறுப்பினராகப் பதிவு செய்வதற்குரிய அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும் பிற நூலகங்களில் உள்ளது போல் உறுப்பினர்கள் சேர்ப்பதற்கான அனுமதியை அரசு வழங்கியது. அதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் பிற நூலகங்களில் உள்ளது போல் அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும் உறுப்பினர்களாகச் சேர்ந்தவர்கள் தாங்கள் விரும்பும் புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று படிக்கும் வசதியினைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கி இரவல் புத்தகம் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டம் குறித்து அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முதன்மை நூலகரும், தகவல் அலுவலருமான காமாட்சி ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "அண்ணா நூற்றாண்டு நூலகம் கடந்த 2010ஆம் ஆண்டு துவக்கி வைக்கப்பட்டது.

நூலகம் துவக்கி வைக்கும்போது 5 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் வாங்கி வைக்கப்பட்டிருந்தன. மேலும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராகப் பதிவு செய்வதற்குச் சமீபத்தில் அரசு அனுமதி வழங்கியது. அதனைத்தொடர்ந்து தற்போது 5,252 பேர் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டு பயன் பெற்று வருகின்றனர்.

உறுப்பினர் கட்டணமாகத் தனிநபர் ஒருவருக்கு ரூ.250 கட்டணமாகவும், இரண்டு பெரியவர் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு உறுப்பினர் கட்டணமாக ரூ.500ம், 60 வயதிற்கு மேல் உள்ள முதியோர் ஒருவருக்குக் கட்டணமாக ரூ.100ம், மாணவர்களுக்குக் கட்டணமாக ரூ.150ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உறுப்பினராக உள்ளவர்கள் தனிநபருக்கு நான்கு புத்தகங்களும், குடும்பத்திற்கு ஐந்து புத்தகங்களும், வயது முதிர்ந்தவருக்கு நான்கு புத்தகங்களும், மாணவர்களுக்கு ஐந்து புத்தகங்களும் இரவலாக வழங்கப்படும்.

மேலும், புத்தகங்களை இரவலாக எடுத்துச் செல்லும் உறுப்பினர்கள் 30 நாட்களுக்குள் திருப்பித் தர வேண்டும். அந்தப் புத்தகத்திற்கு வேறு எந்த உறுப்பினரும் முன்பதிவு செய்யவில்லை என்றால் அதிகபட்சமாக ஒரு முறைக்கு 15 நாட்கள் என்ற வரையில் மேலும் 30 நாட்கள் அந்த உறுப்பினர் அந்த புத்தகத்தை வைத்துப் படித்துக் கொள்ளலாம்.

60 நாட்களுக்கு மேல் புத்தகத்தை இரவலாக எடுத்துச் சென்ற உறுப்பினர் திருப்பித் தரவில்லை என்றால் அவருக்கு ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் வீதம் கட்டணம் வசூல் செய்யப்படும். மேலும் புத்தகங்களை இரவலாக விரும்புபவர்கள் இணையதளத்தில் அவர்களின் செல்போன் எண் மற்றும் இமெயில் ஐடியும் தர வேண்டும்.

அதில், அவர்களுக்குப் புத்தகங்களைப் பெற்றவுடன் குறுஞ்செய்தி அனுப்பப்படும். மேலும் அவர்கள் புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்ததற்கான குறுஞ்செய்தியும் அனுப்பி வைக்கப்படும். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாணவர்களுக்கு ஆய்வுக்கான புத்தகங்கள், பருவ இதழ்கள், டிஸ்னரிகள் போன்றவை இரவலாக வழங்கப்படாது. உறுப்பினர்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வேலை நாட்களில் புத்தகங்களைப் பெற்றுச் சென்று திரும்பிக் கொண்டு வந்து அளிக்கலாம்.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ரூ.3000 மதிப்பில் வரையிலான ஆங்கிலப் புத்தகங்களும், ரூ.1500 மதிப்பிலான தமிழ்ப் புத்தகங்களும் தற்போது இரவலாக வழங்கப்பட்டு வருகிறது. சிறுவர்களுக்கான புத்தகங்களும் வழங்கப்படும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தாங்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் என்பதற்கான கல்வி பயில்வதற்கான சான்றிதழுடன் (bona fide) வந்து பதிவு செய்து பயன் பெறலாம்.

இதனைத் தொடர்ந்து கணிதம், அறிவியல் உள்ளிட்ட பிற புத்தகங்களையும் இரவல் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் இணையதளத்தில் புத்தகங்களைப் பெற்ற பின்னர் மேலும் கால நீட்டிப்பு தேவைப்பட்டால் வீட்டில் இருந்தே புதுப்பித்துக் கொள்ளலாம். சென்னை மாவட்ட அஞ்சல் குறியீடு எண் உள்ளவர்கள் புத்தகங்களை இரவல் செய்து பெற்றுச் செல்ல முடியும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: சிஏஏ மூலம் கரையேற முயற்சிக்கிறார் பிரதமர் மோடி - முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

Last Updated :Mar 11, 2024, 10:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.