ETV Bharat / state

'திமுகவிற்கு ஓட்டுப் போடுவதும்..குரங்குக்கு கோர்ட்டு போடுவதும் ஒன்றுதான்' - திமுகவை விளாசிய விந்தியா - Actress Vindhya Election Campaign

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 2, 2024, 8:14 AM IST

Actress Vindhya AIADMK election campaign: தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதியை திமுக செய்ததில்லை எனவும்; திமுகவிற்கு ஓட்டுப் போடுவதும், குரங்குக்கு கோர்ட்டு போடுவதும் ஒன்றுதான் எனவும், திருடனை கூட நம்பிவிடலாம்; ஆனால், திமுக காரனை நம்பக்கூடாது எனவும் நடிகை விந்தியா குற்றம்சாட்டியுள்ளார்.

ACTRESS VINDHYA AIADMK ELECTION CAMPAIGN
ACTRESS VINDHYA AIADMK ELECTION CAMPAIGN

நடிகை விந்தியா தேர்தல் பிரச்சாரம்

தூத்துக்குடி: தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் அஇஅதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிவசாமி வேலுமணி நடிகையும், அக்கட்சியின் தலைமை பேச்சாளருமான விந்தியா தூத்துக்குடி மாநகரில் உள்ள திரேஸ்புரம் பகுதியில் நேற்று பரப்புரை செய்தார்.

அப்போது பேசிய அவர், "2019 நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனையோ பொய் வாக்குறுதிகளை திமுக அள்ளி வீசி மக்களை ஏமாற்றி, தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி உள்ளிட்ட அத்தனை பேரும் எம்பிகளாக ஜெயித்தனர். ஆனால், கனிமொழி 5 வருடத்தில் சொல்லிக் கொள்ளுமாறு எதுவும் திட்டம் கொண்டு வந்தரா? இந்த மக்களுக்கு ஏதேனும் செய்தரா? தேர்தல் சமயத்தில் தெருத்தெருவாக பிரச்சாரம் செய்தார். தேர்தல் நேரத்தில் விளம்பரத்திற்காக போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்களே தவிர, மக்களோடு மக்களாக மக்களை சந்தித்தாரா?மக்கள் தேவைகளைப் பற்றிக் கேட்டுள்ளாரா? என கேள்வி எழுப்பினார்.

கனிமொழியின் பிரச்சாரத்தை டிவியில் பார்த்தேன். அவர் ஏதோ எதிர்க்கட்சி எம்பி மாதிரியும், இந்த தொகுதியில் நாங்கள் வெற்றி பெற்றால் எல்லாவற்றையும் சரிசெய்வோம் என்றுள்ளார். கடந்த மூன்று வருடமாக தமிழ்நாட்டில் திமுக ஆட்சி தானே நடந்து கொண்டிருந்தது.

நீங்கள் தானே, 5 வருடமாக எம்பியாக இருக்கின்றீர்கள். கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் மக்களை சந்தித்து மறுபடியும் ஒட்டுக் கேட்டு பிரச்சாரத்திற்கு வருகின்றீர்கள். திமுக ஆட்சியில் தமிழ்நாடு தள்ளாடிக் கொண்டு இருக்கின்றது.

சொந்த லாபத்திற்காக எம்பியாக வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, தூத்துக்குடி மக்கள்மேல் பாசம் வைக்கவில்லை. திமுகவினர் டிசைன் டிசைனாக விளம்பரம் கொடுப்பார்கள். ஆகவே, தயவு செய்து இவர்களை நம்ப வேண்டாம்.

5 வருடத்திற்கு முன்னர் செங்கலை கொண்டு வந்தார், உதயநிதி. ஐந்து வருடம் முடிந்தும் இந்த தேர்தலிலும் வெட்கமில்லாமல் அதே செங்கலோடு வருகின்றார். அதைப் பற்றி பேசாமல், அதிமுக கும்பிடு போட்டார்கள், காலில் விழுந்தார்கள் என்று ஆபாசமாக பேசிக் வருகிறார். கொச்சைப்படுத்தி எங்களுக்கும் பேச வரும்; ஆனால், நாங்கள் பேச மாட்டோம். காரணம், நாங்கள் அதிமுககாரர்கள்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "தேர்தல் சமயத்தில் திமுக எத்தனையோ வாக்குறுதிகள் அள்ளிக் கொடுப்பார்கள். தேர்தல் முடிந்தவுடன் அந்த வாக்குறுதி நிறைவேற்றுகிறார்களா? தேர்தல் வருவதற்கு இரண்டு மாதத்திற்கு முன்பே ஆரம்பித்து விட்டார்கள். நாங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கின்றோம். மத்திய அரசு எங்களுக்கு உதவி செய்யவில்லை.

நாங்கள் கேட்ட பணம் கொடுக்கவில்லை என்று மத்திய அரசாங்கம் மேல் பழியைப் போடுகின்றார்கள். நாங்கள் காசு கேட்டால் கொடுக்க வேண்டியதுதானே. அது அவன் அப்பன் வீட்டு காசா? என்று உதயநிதி கேட்கின்றார். நீங்கள் ஒரு விஷயம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் கட்டும் வரியில் 50 பைசா மத்திய அரசாங்கத்திற்கும், 50 பைசா மாநில அரசாங்கத்திற்கு போகின்றது. நம்முடைய இந்த வரிப்பணம் மக்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வரலாம். ஆனால், திமுக அதை செய்யவில்லை.

இப்போது கண்ணா பின்னா வென்று கரண்ட் பில், பால் விலையை ஏற்றி விட்டார்கள். கேட்டால் இந்த பால் குடிக்காதீர்கள் என்று சொல்கின்றார்கள். எந்த பால் குடிக்கணும், குடிக்கக்கூடாது என்று சொல்வதற்கு திமுகாரார் யார்? எல்லா தரப்பு மக்களும் கஷ்டப்படுகின்றார்கள். மக்களுக்காக, கொஞ்சமாவது நல்லது செய்யலாம் அல்லவா. திருடனை கூட நம்பிவிடலாம்; ஆனால், திமுக காரனை நம்பக்கூடாது. திமுகவிற்கு ஓட்டுப் போடுவதும் குரங்குக்கு கோர்ட் போடுவதும் ஒன்றுதான்" என்றார்.

இதையும் படிங்க: வைகை அணை மீன்பிடி உரிமம் தனியாருக்கு டெண்டர்.. அணையில் இறங்கி போராட்டம்; 18 கிராமம் தேர்தல் புறக்கணிக்க திட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.