ETV Bharat / state

“தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறி வருகிறது” - திமுக அரசைக் கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் - ஈபிஎஸ் அறிவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 3, 2024, 4:37 PM IST

ADMK Protest: திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறி வருகிறது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

சென்னை: தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், திமுக அரசை கண்டிக்கும் வகையில் நாளை அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசைக் கண்டித்தும் நாளை, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

நாளைய போராட்டத்தோடு நிச்சயமாக இது நின்றுவிடப் போவதில்லை. தமிழ்நாட்டில் கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும். பெற்றோர்களே, இந்த ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறி வருகிறது. நம் பிள்ளைகளை நாம்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். கவனமாக இருங்கள். மாணவச் செல்வங்களே, இளைய சமுதாயமே, உங்கள் எதிர்காலம் மிக முக்கியம். ஒரு சிறிய தவறு கூட பெரிய தண்டனைகளை பெற்றுத் தந்துவிடும்” என பதிவிட்டுள்ளார்.

மேலும், “தமிழகத்தில் தற்போது ரயில் பெட்டிகள் முதல் குப்பைகள் வரை கோடிக்கணக்கான மதிப்புள்ள போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்படுகின்றன. ஒரே நாளில் பல கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. திமுக நிர்வாகிகள் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவராக இருப்பதால், தமிழகத்தை திமுக அகல பாதளத்திற்கு கொண்டு செல்லும்” என குற்றம் சாட்டி போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க:சங்கரன்கோவில் அருகே பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடி விபத்து.. ஒருவர் பலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.