ETV Bharat / state

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்: நாளை 7 பள்ளிகளுக்கு விடுமுறை.. பாதுகாப்புடன் 10ஆம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்கள்! - leopard Movement In Mayiladuthurai

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 3, 2024, 10:30 PM IST

Leopard Movement In Mayiladuthurai: மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் அச்சுறுத்தல் உள்ள கூறைநாடு பகுதியைச் சேர்ந்த 7 பள்ளிகளுக்கு நாளை விடுமுறை எனவும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும் பள்ளிகளுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

leopard Movement In Mayiladuthurai
leopard Movement In Mayiladuthurai

leopard Movement In Mayiladuthurai

மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகரில் செம்மங்குளம் என்ற பகுதியில் நேற்று (ஏப்.02) இரவு சிறுத்தை ஒன்றின் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து, அப்பகுதியில் சிறுத்தையின் கால் தடம் இருந்தது உறுதியானது.

அதனைத் தொடர்ந்து, சிசிடிவி பதிவுகளைப் பார்த்ததில் சிறுத்தையின் நடமாட்டம் தென்பட்டது. செம்மங்குளம் அருகில் சிறுத்தை சென்று பதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இடத்தில் வனத்துறையினர், காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே நிலைமையின் விபரீதம் புரியாமல் சிறுத்தையை வேடிக்கை பார்ப்பதற்காக நகரின் பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் இரு சக்கர வாகனத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாகக் கூறப்படும் இடத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஆகவே, காவல் துறையினர் பொதுமக்களை எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுமட்டும் அல்லாது, அப்பகுதி ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும், சிறுத்தை பதுங்கி இருப்பதாகக் கருதப்படும் கூறைநாடு, தெற்கு சாலிய தெரு, வடக்கு சாலிய தெரு, மேல ஒத்தசரகு, கீழ ஒத்தசரகு, செங்கழநீர் பிள்ளையார் கோயில் தெரு, பூக்கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் அடர்ந்த இடங்களில், பழங்காவிரி கரை பகுதிகளில், வனத்துறையினர் வலைகள் மற்றும் கயிறுகளுடன் தீவிரமாகச் சிறுத்தையைத் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், சிறுத்தை நடமாட்டம் உள்ள கூறைநாடு என்ற இடத்தை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், சீர்காழி வன அலுவலர் ஜோசப் டேனியல், திருச்சி உதவி வன பாதுகாப்பு அலுவலர் செல்வம் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கூறுகையில், "பொதுமக்கள் பெண்கள் இரவில் வீட்டை விட்டு எச்சரிக்கையுடன் வெளியே வரவேண்டும். குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் வெளியே வர வேண்டாம்.

சம்பந்தப்பட்ட பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணிக்க வனத்துறை சார்பில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடு அறை அமைக்கப்பட்டு பொதுமக்களிடம் தகவல் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறுத்தை இன்னும் பிடிபடாத நிலையில் பிரச்சனைக்குரிய கூறைநாடு பகுதியைச் சார்ந்த ஏழு தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் மூன்று பள்ளிகளுக்கு வனத்துறையினர், காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு அளிப்பார்கள்.

இந்த சூழலில், பொதுமக்கள் எந்தவித அச்சமும் அடையத் தேவையில்லை. சிறுத்தை இருக்கும் இடம் தெரிந்தால் சீர்காழி வனச்சரக அலுவலரின் 9994884357 என்ற செல்போன் எண்ணுக்குத் தகவல் தெரிவியுங்கள்" என்று மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: "போ சாமி போ, நல்ல பையன்ல" - மாட்டுக் கொட்டகைக்குள் புகுந்த யானையைக் கொஞ்சி பேசி விரட்டிய மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.