ETV Bharat / entertainment

"வணங்கான் படப்பிடிப்பில் இயக்குநர் பாலா என்னை அடித்தார்" - பிரேமலு நடிகை பகீர் குற்றச்சாட்டு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 28, 2024, 10:19 PM IST

Updated : Feb 29, 2024, 4:38 PM IST

Mamitha about director Bala: வணங்கான் படப்பிடிப்பு சமயத்தில் இயக்குநர் பாலா தன்னை அடித்ததால் படத்தில் இருந்து விலகிவிட்டேன் என நடிகை மமிதா பைஜூ தெரிவித்துள்ளார்.

Mamitha about director Bala
பிரேமலு நடிகை மமிதா பைஜூ

சென்னை: தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை இயக்கி தனக்கென ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டவர், இயக்குநர் பாலா. இவரது இயக்கத்தில், 'வணங்கான்' என பெயரிடப்பட்ட படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. பின்னர், பல்வேறு காரணங்களால் அத்திரைப்படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகுவதாக அறிவிப்பு வெளியானது.

இதனையடுத்து, வணங்கான் படத்தை அருண் விஜய்யை வைத்து இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் பாலா. மேலும், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடித்து உள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுத, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களின் சில பகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் ஒரு கையில் விநாயகர் மற்றொரு கையில் பெரியார் சிலைகளை வைத்திருந்த அருண் விஜய்யின் புகைப்படம் வைரலானது. சமீபத்தில் இதன் டீஸர் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தில் சூர்யா நடிக்க இருந்தபோது நாயகியாக நடித்தவர் மமிதா பைஜூ. அந்த படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் பாலா என்னை அடித்ததாக சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற ‘பிரேமலு’ படத்தின் மூலம் கவனிக்கப்பட்டவர் மமிதா பைஜூ. வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகிய நிலையில் இவரும் விலகினார். இது தொடர்பாக அவர் மலையாள யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "வணங்கான் படத்தில் முதலில் நான் கமிட் ஆகியிருந்தேன்.

அப்படத்தில் ‘வில்லடிச்சா மாடன்’ என்றொரு கலை இருந்தது. அதற்கு பாடிக் கொண்டே ஆடவேண்டும். இதில் எனக்கு எந்த அனுபவமும் இல்லை. ஆனால், படத்தில் அனுபவம் வாய்ந்த கதாபாத்திரம் இதை செய்வது போல சித்தரிக்கப்படுகிறது. இதை எப்படி செய்வது என்பது குறித்து இயக்குநர் பாலா, அந்தக் கலையில் தேர்ந்த பெண்ணிடம் எனக்கு செய்து காட்டும்படி சொன்னார்.

இதையும் படிங்க: சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் தங்கம் தென்னரசு விடுதலை செய்யப்பட்டது ஏன்? - உயர் நீதிமன்றத்தில் காரசார வாதம்!

அவர் செய்து முடித்ததும், உடனே பாலா ஓகே நாம் இப்போது டேக் போகிறோம் என்றார். நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன். ஏன் என்றால் நான் அதற்கு உடனடியா தயாராக இல்லை. என்ன பாடுறாங்க என்பது கூட எனக்குத் தெரியவில்லை. அதை எல்லாம் தெரிந்துகொள்ள எனக்கு நேரம் தேவைப்பட்டது. அதனால் 3 டேக்குகள் எடுத்தேன். அப்போது அவர் நிறைய திட்டிவிட்டார். முன்னாடியே நான் அவ்வப்போது திட்டுவேன், பெரிசா எடுத்துக்காதீங்க என இயக்குநர் பாலா சொல்லியிருந்தார்.

இருந்தாலும், அந்த நேரத்தில் அவரின் திட்டு என்னை காயப்படுத்திவிட்டது. ஷூட்டிங்கின் போது அதற்காக நான் மனதளவிலேயே தயாராகி வருவேன். சில சமயம் அவர் என்னை முதுகில் அடிக்கவும் செய்தார். சூர்யா ஏற்கெனவே பாலாவுடன் படம் பண்ணியிருப்பதால் அவர் எப்படியென தெரிந்து வைத்திருந்தார். புதுசா வந்ததால் எனக்குத்தான் தெரியவில்லை. இது மாதிரியான அனுபவங்களை ஃபேஸ் பண்ண பிடிக்காததால் ‘வணங்கான்’ படத்திலிருந்தே விலகிவிட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அமெரிக்க ராணுவ வீரர் தற்கொலைக்கு ஜி.வி.பிரகாஷ் உருக்கமான இரங்கல்!

Last Updated :Feb 29, 2024, 4:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.