ETV Bharat / entertainment

என்னை சிறந்த நடிகையாக மாற்றுவதற்கு பாலா முயற்சித்தார்.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மமிதா பைஜூ!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 1, 2024, 3:56 PM IST

Actress Mamita Baiju: இயக்குநர் பாலா தன்னை அடித்ததால் படத்தில் இருந்து விலகியதாகக் கூறிய நடிகை மமிதா பைஜூவின் பேச்சு சர்ச்சையான நிலையில், தன்னை சிறந்த நடிகையாக மாற்றுவதற்கே பாலா முயற்சித்ததாகக் கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

actress mamita baiju clarify about the controversy on director bala
இயக்குநர் பாலா மீதான சர்ச்சை குறித்து நடிகை மமிதா பைஜு விளக்கம் அளித்துள்ளார்

சென்னை: சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'பிரேமலு' படத்தின் மூலம் கவனிக்கப்பட்டவர், மமிதா பைஜூ. இவர், பாலா இயக்கத்தில் உருவாகி வந்த 'வணங்கான்' படத்தில் சூர்யா நடித்தபோது நாயகியாக நடித்து வந்தார். பின் படத்தில் இருந்து சூர்யா விலகிய நிலையில், இவரும் விலகினார்.

இதையடுத்து, சமீபத்தில் மலையாளச் சேனலுக்கு பேட்டியளித்த இவர், இயக்குநர் பாலா தன்னை அடித்ததாக கூறியிருந்தார். இது தொடர்பாக அவர் "வணங்கான் படத்தில் முதலில் நான் கமிட் ஆகியிருந்தேன். அப்படத்தில் 'வில்லடிச்சா மாடன்' என்றொரு கலை இருந்தது. அதற்கு பாடிக்கொண்டே ஆட வேண்டும்.

இதில் எனக்கு எந்த அனுபவமும் இல்லை. மேலும், படத்திலும் அனுபவம் இல்லாததால், சில டேக்குகள் எடுத்தேன். அதற்கு அவர் என்னைத் திட்டினார். முன்பே அவர், நான் அவ்வப்போது திட்டுவேன். அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனக் கூறியிருந்தார். இருந்தாலும், அந்த நேரத்தில் அவரின் திட்டு என்னைக் காயப்படுத்திவிட்டது.

ஷூட்டிங்கின்போது அதற்காக நான் மனதளவிலேயே தயாராகி வருவேன். சில சமயம் அவர் என்னை முதுகில் அடிக்கவும் செய்தார்" என்று கூறியிருந்தார். இதையடுத்து, இந்த விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியது. விஷயம் பெரிதாகவே, அவர் தற்போது, தான் கூறியதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து மமிதா பைஜூ தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், "என்னை சிறந்த நடிகையாக மாற்றவே பாலா முயற்சித்தார். என்னை அவர் உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தினார் என்பது ஆதாரமற்ற உண்மை. நான் தமிழ் திரைப்படத்தில் ஈடுபடுவது தொடர்பாக, இணையத்தில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

ஒரு திரைப்பட விளம்பர நேர்காணலின் ஒரு பகுதி மட்டும் பரப்பப்பட்டு, பொறுப்பற்ற தலைப்பை உருவாக்குவதற்காக தவறாக குறிப்பிடப்பட்டு உள்ளது. படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன், புரொடக்‌ஷன் என ஒரு வருடத்திற்கு மேல் பாலா சாருடன் வேலை பார்த்திருக்கிறேன். என்னை ஒரு சிறந்த நடிகையாக மாற்றுவதற்கே முயற்சித்தார்.

அந்த படத்தில் நான் பணிபுரிந்தபோது, மன ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ எந்த விதமான துஷ்பிரயோகமான நடத்தையையும் நான் அனுபவிக்கவில்லை. பிற தொழில் ரீதியான கமிட்மென்ட்கள் காரணமாகவே, அந்த படத்திலிருந்து விலகிவிட்டேன். வெளியிடும் முன் செய்தியை சரிபார்க்க என்னை தொடர்பு கொண்ட ஊடக நிறுவனங்களுக்கு நன்றி. நீங்கள் புரிந்து கொண்டதற்கும் நன்றி" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலையம்: சுற்றுச்சூழல் அனுமதி கோரி தொழில் வளர்ச்சிக் கழகம் விண்ணப்பம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.