ETV Bharat / bharat

ராமரிடம் மன்னிப்பு.. உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி - அயோத்தி விழாவில் பிரதமர் மோடி!

author img

By ANI

Published : Jan 22, 2024, 5:04 PM IST

Updated : Jan 22, 2024, 5:21 PM IST

PM Modi speech: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு தாமதமானதற்காக ராமரிடம் மன்னிப்பு கேட்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

அயோத்தி: உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். மேலும், இந்த நிகழ்வில் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும், சச்சின், மிதாலி ராஜ் உள்ளிட்ட விளையாட்டு நட்சத்திரங்களும் பங்கேற்றனர். இதற்காக அயோத்தி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதனையடுத்து, இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, “இந்த விழாவில் குழந்தை ராமரின் சிலையை திறப்பது என்பது வெற்றி மட்டுமல்ல, பணிவும்தான். நமது நாடு வரலாற்று முடிச்சுகளை அவிழ்த்து அழகான எதிர்காலத்திற்குச் சென்றுள்ளது. ராமர் கோயில் கட்டுமானம் என்பது அமைதி, பொறுமை ஆகியவற்றைக் காட்டுகிறது. நாம் இந்த இடத்தில் எந்த நெருப்பையும் பார்க்கவில்லை. ஆனால் அங்கு ஒரு ஆற்றல் இருக்கிறது.

அயோத்தி கோயிலானது ராமர் வடிவில் ஒரு தேசிய உணர்வைக் கொண்டுள்ளது. இது சாதாரணமாக கடவுளின் கோயில் அல்ல. இது இந்தியாவின் தொலைநோக்கு, தத்துவம் மற்றும் வழிகாட்டுதல்களைக் கொண்டுள்ளது. கடந்த 11 நாட்களாக நான் பல்வேறு மொழிகளில் ராமாயணத்தைக் கேட்கும் வாய்ப்பை பெற்றேன். 2019, நவம்பர் 9 அன்று ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்த உச்சநீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜனவரி 22, 2024 ஆன இன்றைய நாளை அடுத்த ஆயிரம் வருடங்களுக்கும் மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள். இது ஒரு புதிய காலச்சக்கரத்தை கொடுத்துள்ளது. நூற்றாண்டுகள் கடந்து, ராமர் தனது இடத்திற்கு வந்துள்ளார். இந்த நாடு அடிமைத்தனத்தை உடைத்தெறிந்துள்ளது. நாடு முழுவதும் இன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. ராமர் கோயில் கட்டுமானத்தை தாமதப்படுத்தியதற்காக ராமரிடம் மன்னிப்பு கேட்கிறேன். ராமர் இனி கூடாரத்தில் தங்க வேண்டியதில்லை. அவர் இனி பிரமாண்ட கோயிலில் தங்குவார்” என்றார்.

முன்னதாக, குழந்தை வடிவ ராமர் சிலை கோயில் தரைத்தளத்தில் உள்ள கருவறையில் வைக்கப்பட்டது. அப்போது நடைபெற்ற பரிகிரமா மற்றும் தண்டாவத் பிராணத்தில் பிரதமர் பங்கேற்றார். அந்த நேரத்தில் சாதுக்களிடம் இருந்து மோடி ஆசி பெற்றார். இந்த நிகழ்வின்போது ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரப் பிரதேச மாநில ஆளுநர் அனந்திபென் படேல் மற்றும் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், குழந்தை ராமர் சிலை திறக்கப்பட்டபோது ஹெலிகாப்டரில் இருந்து மலர் மழை தூவப்பட்டது.

இதையும் படிங்க: அயோத்தி விழா நேரலை வழக்கு; வாய்மொழி உத்தரவை யாரும் பின்பற்றக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Last Updated :Jan 22, 2024, 5:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.