ETV Bharat / bharat

கர்நாடகாவில் ப்ரீ வெட்டிங் ஷூட்டை தொடர்ந்து மருத்துவக் கல்லூரியில் ரீல்ஸ் எடுத்த 38 மாணவர்கள் சஸ்பெண்ட்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 10, 2024, 1:05 PM IST

Updated : Feb 11, 2024, 5:26 PM IST

GIMS Medical Students Suspend: கடாக் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மாணவர் எடுத்த ரீல்ஸ் வைரலான நிலையில், தற்போது 38 மருத்துவ மாணவர்களை கல்லூரி இயக்குனர் டாக்டர் பசவராஜ் பொம்மனஹள்ளி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

GIMS Medical Students Suspend
கர்நாடகாவில் மருத்துவ மாணவர்கள் சஸ்பெண்ட்

கடாக்: கர்நாடக மாநிலம் கடாக் பகுதியில், கடாக் மருத்துவ அறிவியல் நிறுவனம் (GIMS) செயல்பட்டு வருகிறது. இந்த ஜிம்ஸ் மருத்துவமனை வளாக நடைபாதையில், மருத்துவம் பயிலும் மாணவர்கள் இந்தி மற்றும் கர்நாடக திரைப்படப் பாடல்களுக்கு ரீல்ஸ் எடுத்து வைத்திருந்துள்ளனர். பின்னர், அந்த ரீல்ஸ்களை மாணவர்கள் தங்களது சமூகவலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, அந்த வீடியோ வைரலாகி உள்ளது.

இந்த நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் துன்பம் ஒரு பக்கம், இப்படி மாணவர்கள் கேலியும் கிண்டலுமாக ரீல்ஸ் தயாரித்து வெளியிடும் செயல் மறுபுறம், உங்களுக்கு ரீல்ஸ் எடுக்க வேறு இடமே கிடைக்கவில்லையா என நெட்டிசன்கள் தங்களது ஆதங்கங்களை கருத்துக்களாக பதிவிட்டனர்.

அதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஜிம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பசவராஜா பொம்மனஹள்ளியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பின்னர் ஜிம்ஸ் இயக்குனர், ரீல்ஸ் எடுத்து வெளியிட்ட 38 மாணவர்களையும் 10 நாட்கள் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

பின்னர் இது தொடர்பாக விளக்கம் அளித்த மருத்துவமனை இயக்குனர், "இது போன்ற செயல்களை மருத்துவமனையில் செய்வது மிகப்பெரிய குற்றம். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அசௌகரியம் அடையும் வகையில், பொது இடத்தில் இப்படி செய்வது நிச்சயம் தவறு. ரீல்ஸ் செய்தவர்கள் எல்லாம் எம்பிபிஎஸ் படிப்பை முடித்து வீட்டில் இருப்பவர்கள்.

இது போன்ற வீடியோவை எடுப்பதற்கு நிர்வாகம் தரப்பில் இருந்து நாங்கள் யாரும் அனுமதி வழங்கவில்லை. எதிர்காலத்தில் இது போன்று மருத்துவமனையில் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவம் தொடர்பாக எங்களது கவனத்திற்கு வந்தவுடன், சம்பந்தப்பட்ட 38 மாணவர்களையும் அழைத்து விசாரணை செய்தோம்.

அப்போது அவர், இன்னும் சில நாட்களில் முதுகலை பட்டப்படிப்பு உள்ளது. அதனுடைய தயாரிப்புக்காகத்தான் செய்தேன் என பதிலளித்தார். ஆனால், இதற்கு நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. ஆகையால், அவரை இடைநீக்கம் செய்து தண்டனை வழங்கியுள்ளோம். மீண்டும் இது போன்று செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இதே போன்ற ஒரு சம்பவம், சித்ரதுர்காவில் உள்ள பரமசாகர் என்ற கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனையிலும் நடந்துள்ளது. அதாவது, ஆபரேஷன் தியேட்டரில் திருமணத்துக்கு முந்தைய படப்பிடிப்பு (pre-wedding shoot) நடத்தப்பட்டு, அந்த வீடியோவும் இணையத்தில் வைரலானது.

அதனைத் தொடர்ந்து அந்த வீடியோ தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், சட்டவிரோத நடத்தை, பணி நேரத்தில் கடமை தவறுதல் உள்ளிட்ட குற்றச் செயலுக்காக மருத்துவமனையின் ஒப்பந்த மருத்துவரும், மாவட்ட ஆட்சியருமான டி.வெங்கடேஷ், மருத்துவர் அபிஷேக்கை பணியில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், இச்சம்பவம் குறித்து கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தனது சமூக வலைத்தளமான X தளத்தில், "சித்ரதுர்காவில் உள்ள பரமசாகர் அரசு மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டரில், திருமணத்திற்கு முந்தைய படப்பிடிப்பை நடத்திய மருத்துவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரசு மருத்துவமனைகள் மக்களுக்காகத்தான் இருக்கின்றனவே தவிர, தனிப்பட்ட வேலைக்களுக்காக அல்ல. மருத்துவரின் இத்தகைய ஒழுக்கமின்மையை நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன்" என பதிவிட்டுள்ளார்.

இதே போல, கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் கர்நாடகா மாநிலம், ஹூப்ளியில் உள்ள கர்நாடக மருத்துவ அறிவியல் கழகத்தில் (KIMS), செவிலியர்களை கிண்டல் செய்யும் விதமாக கல்லூரி மாணவர்கள் பதிவிட்ட வீடியோ வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 11 மருத்துவ மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இளங்கலை நீட் நுழைவுத் தேர்விற்கு மார்ச் 9 வரை விண்ணப்பிக்கலாம்..! மே 5ஆம் தேதி நுழைவுத் தேர்வு..!

Last Updated :Feb 11, 2024, 5:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.