ETV Bharat / bharat

ஜெயலலிதாவை ஜாமினில் எடுத்தவர்! யார் இந்த ஃபாலி எஸ் நாரிமன்?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 21, 2024, 2:24 PM IST

Updated : Feb 21, 2024, 5:18 PM IST

Fali S Nariman history: தனது இறப்பு வரை மற்ற வழக்கறிஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கிய உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ் நாரிமன் கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ் நாரிமன்
உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ் நாரிமன்

ஹைதராபாத்: மூத்த வழக்கறிஞரும், சட்ட வல்லுநருமான ஃபாலி எஸ் நாரிமன்(வயது 95) டெல்லியில் இன்று (பிப்.21) காலமானார். உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன், தனது இறப்பு வரை மற்ற வழக்கறிஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கினார் என சட்ட வல்லுநர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.

யார் இந்த ஃபாலி நாரிமன்?: ஃபாலி நாரிமன் 1929 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி மியான்மரில் பிறந்தார். பள்ளிப்படிப்பை சிம்லாவிலும், பொருளாதார பிரிவில் பட்டப்படிப்பையும், சட்டப்படிப்பையும் மும்பையில் அரசு சட்டக் கல்லூரியிலும் முடித்தார். நாரிமன் மும்பை உயர்நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் பயிற்சியைத் தொடங்கினார். வழக்கறிஞராக 22 ஆண்டுகள் பயிற்சியை நிறைவு செய்த பிறகு, அவர் 1971 இல் இந்திய உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.

மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக (ASG) மே 1972- ஜூன் 1975 வரை இருந்தார். 1991 முதல் 2010 வரை இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராகவும், 1999 - 2005 வரை மாநிலங்களவை நியமன உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா சொத்து வழக்கு: 1991-96 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தனது பதவி காலத்தில் மாதம் 1 ரூபாய் ஊதியமாக பெற்றார். ஆனால், 5 ஆண்டு கால ஆட்சி முடிவில் வருமானத்துக்கு அதிகமாக 66.65 கோடி ரூபாய் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.

1996 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் 18 ஆண்டுகளுக்கு பின் 2014ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவையடுத்து 22 நாட்கள் சிறையில் இருந்த ஜெயலலிதா, ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் ஜெயலலிதாவிற்காக மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் ஆஜராகி, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு ஜாமீன் பெற்றுத் தந்தார். நாட்டையே உலுக்கிய போபால் விஷவாயு வழக்கில் யூனியன் கார்பைடு நிறுவனத்திற்கு ஆதரவாக ஃபாலி நாரிமன் ஆஜராகி வாதிட்டார். ஆனால், அதற்கான ஆஜரானது தவறு என்று சமீப காலங்களில் ஒப்புக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

விருதுகள்: உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான ஃபாலி நாரிமனுக்கு 1991ல் பத்ம பூஷன், 2007ல் பத்ம விபூஷன் விருதுகள் மத்திய அரசால் வழங்கப்பட்டன. பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியதற்காக 2018 ஆம் ஆண்டுக்கான 19வது லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருதையும் பெற்றுள்ளார்.

வழக்கறிஞர் பணி: இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற அரசியலமைப்பு வழக்குகள் மற்றும் பல முன்னணி தலைவர்களின் வழக்குகளில் திறமையாக வாதிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சட்டப் பணிகள் குறித்து கருத்து தெரிவித்த மூத்த வழக்கறிஞர், கே.எம் விஜயன், வழக்கறிஞராக தனது பணியை முழுமை செய்துள்ளார்.

மூத்த வழக்கறிஞராக நீதிமன்றத்தில் தனது வாதத்திறமையால் மற்ற வழக்கறிஞர்களுக்கு முன்னுதாரணமாக இருந்துள்ளார். வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு வழிகாட்டியாகவும் இருந்துள்ளார். நீதிபதியாகும் வாய்ப்புகள் வந்த போதும், வழக்கறிஞராகவே இறுதி வரை இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மூத்த சட்ட வல்லுநர் ஃபாலி எஸ் நாரிமன் காலமானார்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல்!

Last Updated :Feb 21, 2024, 5:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.