ETV Bharat / bharat

காங்கிரஸ் - ஆம் ஆத்மி தொகுதி பங்கீடு சுமூகம்? யாராருக்கு எத்தனை தொகுதிகள்?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 22, 2024, 1:59 PM IST

Cong-AAP Seat Sharing: டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ் 3 இடங்களிலும், ஆம் ஆத்மி 4 இடங்களிலும் போட்டியிட பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Etv Bharat
Etv Bharat

டெல்லி : விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பை வெகு விரைவில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு முன்னதாக தேசியக் கட்சிகளிடையே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்து உள்ளது.

ஒரு புறம் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், தொகுதி பங்கீடு குறித்து மவுனம் காத்து வரும் நிலையில், மற்றொரு புறம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தலைமையிலான இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்து உள்ளது. உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் - சமாஜ்வாதி இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை அடைந்து உள்ளது.

மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 17 இடங்களை ஒதுக்கி உள்ளதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்து உள்ளார். இதனிடையே தலைநகர் டெல்லியிலும் காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

மொத்தம் 7 மக்களவை தொகுதிகளை கொண்ட டெல்லியில் ஆம் ஆத்மி 4 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 3 இடங்களிலும் போட்டியிட முடிவு எட்டப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாகவும் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடிவு அறிவிக்கப்படும் என்றும் ஆம் ஆத்மி கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தகக்து.

இதனிடையே மதுபான கொள்கை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 7வது முறையாக சம்மன் அனுப்பி உள்ளது. வரும் பிப்ரவரி 26ஆம் தேதி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.

முன்னதாக மதுபான கொள்கை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அமலாக்கத்துறை விசாரணையை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புறக்கணித்ததாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்தது. கடந்த 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 7 இடங்களையும் பாஜக கைப்பற்றியது.

இதில் கடந்த 2014ஆம் ஆண்டை காட்டிலும் 2019ஆம் ஆண்டு பாஜகவின் வாக்காளர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் வரை உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுவே காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு மக்களவை தேர்தலை எதிர்கொள்வதில் உள்ள பெரும் சிக்கலாக உள்ளது.

இதையும் படிங்க : "ராகுல் காந்தி யாத்திரையில் கலந்து கொள்ள போவதில்லை"- அகிலேஷ் அதிரடி! என்ன காரணம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.