துக்க நிகழ்ச்சியில் கற்களை வீசித் தாக்குதல் - பதைபதைக்கும் வீடியோ

By

Published : May 22, 2023, 11:14 PM IST

thumbnail

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே உள்ள புதுகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் எமநாயகம் (78). இவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ள நிலையில், அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் தனித்தனியாக அவர்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதனிடையே, எமநாயகத்தை கவனித்துக் கொள்வதற்கு யாரும் இல்லாத காரணத்தல், அவர் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை வட்டம் மாம்பாக்கம் கிராமத்தில் வசித்து வரும் தனது முதல் மகளான யசோதா வீட்டில் வசித்து வந்தார். 

இந்த நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சமீபத்தில் மாம்பாக்கம் பகுதியில் அவர் உயிரிழந்தார். அவரது சொந்த ஊரான புதுகோட்டை பகுதிக்கு சடலத்தை கொண்டு வரப்பட்டு இறுதி சடங்கி செய்யும் நிகழ்ச்சி நேற்று (மே 21) மாலை நடைபெற்றது. 

அப்போது மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாபு (31), முரளி (31), மணிகண்டன் (29) உள்ளிட்ட பலர் உடலை சுற்றி வரும்போது உடனிருந்தனர். அப்போது அங்கிருந்த சின்னதுரை என்ற பெரியவர் மதுபோதையில் மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாபுவை தகாத வார்த்தையில் பேசியதோடு தாக்கியதாக தெரிகிறது. 

இதனால், இரு தரப்பினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் புதுகோட்டை பகுதியை சேர்ந்தவர்களான சேட்டு, தினேஷ், சின்னா, தட்சிணாமூர்த்தி, சம்பத், ராமஞ்சிலி, சின்னதுரை ஆகியோர் உட்பட பலர் மாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்களை கருங்கல், செங்கற்கள், கட்டை உள்ளிட்டவையால் தாக்கினர். இதில் பாபு, முரளி, மணிகண்டன், மாற்றுத்திறனாளி பிரவீன் ஆகியோருக்கு படுகாயம் ஏற்பட்டது. 

மேலும், காயப்பட்ட அனைவரும் செய்யார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், இவ்வாறு கற்களை கொண்டு தாக்கும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை பதைபதைக்க செய்கிறது. இது குறித்து தகவலறிந்த பெரணமல்லூர் காவல் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வீடியோ பதிவை வைத்துக்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.