அருணாச்சலேஸ்வரர் கோயிலில் 1,008 கலசாபிஷேகம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
திருவண்ணாமலை: அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் அக்னி நட்சத்திரம் தோஷ நிவர்த்தியை முன்னிட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க 1008 கலசாபிஷேகம் இன்று (மே 28) வெகு விமர்சியாக நடைபெற்றது. திருவண்ணாமலை நகரில் உள்ள உலகப் புகழ்பெற்ற பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், 'நினைத்தாலே முக்தி' அளிக்கும் தலமாகவும் விளங்கக்கூடியது, அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்.
ஒவ்வொரு ஆண்டும் 'அக்னி நட்சத்திரம்' தோஷ நிவர்த்தியை முன்னிட்டு, சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க மங்கல வாத்தியத்துடன் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனுக்கு 1,008 கலசாபிஷேகம், மகா யாகம் நடத்துவது வழக்கம். அந்தவகையில், இந்த ஆண்டுக்கான அக்னி நட்சத்திரம் தோஷ நிவர்த்தி பூஜை 1,008 கலசாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, நடந்த மகா தீபாரதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆண்டுதோறும் அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதல் நிவர்த்தி அடையும் நாள் வரை அண்ணாமலையாருக்கு வெயிலின் தாக்கம் ஏற்படாதவாறு கருவறையில் உள்ள சிவலிங்கத்திற்கு வெட்டிவேர், பன்னீர் மூலிகை திரவியங்கள் உள்ளிட்டவைகள் தாராபாத்திரத்தில் கலந்து சொட்டு சொட்டாக 'தாராபிஷேகம்' நடைபெறும். அதே நேரத்தில், அக்னி நட்சத்திர தோஷ நிறைவு பெறுவதை முன்னிட்டு 1,008 கலச அபிஷேகம் செய்து அக்னி நட்சத்திரம் தோஷ நிவர்த்தி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கடந்த 4 ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதல் அண்ணாமலையாருக்கு தாராபிஷேகம் தினந்தோறும் நடைபெற்று வந்த நிலையில் நாளை (மே 29) திங்கட்கிழமையுடன் அக்னி நட்சத்திரம் தோஷ நிவர்த்தி பெறுகிறது.
இதை முன்னிட்டு, சிவாச்சாரியார்கள் உண்ணாமுலை அம்மன் சன்னதி அருகே உள்ள தங்க கொடிமரம் முன்பு மிக பெரிய யாகசாலை அமைத்து முதல் கால யாக பூஜைகள் செய்தனர். இதனைத்தொடர்ந்து நாளை காலை இரண்டாம் கால யாக பூஜையும், மாலை மூன்றாம் கால யாக பூஜையும், அதனைத் தொடர்ந்து மறுநாள் திங்கட்கிழமை அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி நாளான அன்று யாகசாலையில் நான்காம் கால யாகத்துடன் பூர்ணாஹுதி நடைபெற்றது. பின்னர், யாகசாலையில் இருந்து 1008 கலசங்களை மேள வாத்தியத்துடன் வேதமந்திரங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்று உச்சிக்கால வேளையில் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு கலசாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.