சர்வதேச போட்டியில் பதக்கம் வென்ற திருச்சி முன்னாள் மேயர் மகன்!

By

Published : Mar 15, 2023, 2:16 PM IST

thumbnail

சென்னை: கத்தார் நாட்டில் சர்வதேசத் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ், இந்தியா உள்பட 40 நாடுகள் பங்கேற்றன. இந்தியா சார்பில் 3 ஆண் வீரர்களும், 3 பெண் வீரர்களும் பங்கேற்றனர். ஆண்கள் பிரிவில் தனி நபர் துப்பாக்கி சுடும் போட்டியில் திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் மகன் பிருத்விராஜ் தொண்டைமான் வெண்கல பதக்கத்தை வென்றார். இதைத் தொடர்ந்து கத்தாரிலிருந்து டெல்லி வழியாகச் சென்னை வந்த பிரித்வி ராஜ் தொண்டைமானிற்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

பிருத்வி ராஜ் தொண்டைமான் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கடந்த 15 ஆண்டுகளாகத் துப்பாக்கிச் சூடும் பயிற்சி செய்து வருகிறேன். சர்வதேச அளவில் முதல் முறையாக வெண்கல பதக்கம் பெற்றுள்ளேன். வருங்காலத்தில் நிறைய பதக்கங்களைப் பெற வேண்டும் என்பது எனது ஆசை. அடுத்த ஆண்டு நடக்கும் ஒலிம்பிக்கில் பதக்கம் பெற வேண்டும் என்பது தான் எனது லட்சியம்.

கடந்த காலங்களை விட தற்போது மத்திய அரசு துப்பாக்கி சூடும் விளையாட்டிற்குப் பல உதவிகளைச் செய்து வருகிறது. மாநில அரசு உதவிகளை அதிகமாகச் செய்தால் நன்றாக இருக்கும். தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சரைச் சந்தித்து இது தொடர்பாகக் கோரிக்கை வைப்பேன். துப்பாக்கிச் சூடும் பயிற்சிக்கு உதவி அளிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. விளையாட்டுத் துறையிலிருந்தால் இளைஞர்களுக்குக் கெட்ட பழக்க வாய்ப்புகள் இருக்காது. விளையாட்டில் ஆர்வம் காட்டினால் கெட்ட பழக்கத்திற்கு வாய்ப்பு இருக்காது" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.