Tamil Culture Video: களைப்பு தெரியாமல் இருக்க பாட்டுப்பாடிய படி நாற்று நடவு செய்யும் பெண்கள்!
Published: May 23, 2023, 11:02 AM

மயிலாடுதுறை: குறுவை சாகுபடி செய்வதற்கு நடப்பாண்டில் 93 ஆயிரத்து 711 ஏக்கரில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய நான்கு தாலுகா பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக விவசாயிகள் நிலத்தை டிராக்டர் இயந்திரம் மூலம் உழவடித்தல், அண்டை வெட்டுதல், நிரவுதல் போன்ற வேலைகளை செய்தனர்.
தற்போது, பாய்நாற்றங்களில் முளைத்த நாற்றுகளை நிலத்தை சமன் செய்யும் பணி முடிவடைந்த வயலில் நடவு செய்யும் பணியைத் தொடங்கியுள்ளனர். தற்போது வரை மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கர் வரையில் நடவுப் பணிகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை அருகே உள்ள கழனிவாசல் கிராமத்தில் நாற்று நடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
மாவட்டத்தில் அக்னி வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், தங்களுக்கு களைப்பு தெரியாமல் இருக்கவும், பணி சுணக்கம் இன்றி மும்முரமாய் நடவு செய்யவும் நாற்று நடவு செய்யும் பெண்கள் தங்களுக்குத் தெரிந்த நாட்டுப்புறப் பாடல்கள், தெம்மாங்கு பாடல்கள் மற்றும் சினிமா பாடல்களை அழகிய ராகத்தோடு பாடி உற்சாகத்தோடு நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.