மாமியாரை குத்தி கொலை செய்த மருமகன் - போலீஸ் விசாரணை

author img

By

Published : Mar 14, 2022, 6:54 AM IST

மாமியாரை குத்தி கொலை செய்த மருமகன்

திருச்சுழி அருகே தனது மனைவி பிரிந்து வாழ்வதற்கு மாமியார் காரணம் என எண்ணி, அவரது வீடு புகுந்து சரமாரியாக குத்தி படுகொலை செய்த மருமகனை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

விருதுநகர்: திருச்சுழி அருகேவுள்ள உடையானம்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மனைவி ராக்கம்மாள் (52), திமுக வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராக உள்ளார். முன்னாள் ஊராட்சிமன்ற தலைவராகவும் பதவி வகித்தவர். இவர் கணவர் இறந்துவிட்ட நிலையில் இவருக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மூத்தமகன் ராணுவத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் இரண்டு மகன்கள் கல்லூரிப் படிப்பு படித்து வருகின்றனர்.

இவரது மகள் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வரும் நிலையில் ராக்கம்மாளின் அக்கா அவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் அவர்களது மகளான சோலைமணியை ராக்கம்மாள் பராமரிப்பில் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சோலைமணிக்கும் அதே ஊரைச் சேர்ந்த மூர்த்தி என்பவருக்கும் ராக்கம்மாள் திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே சோலைமணி கருத்து வேறுபாடு காரணமாக கணவர் மூர்த்தியை விட்டு பிரிந்துள்ளார்.

இதற்கு காரணம் ராக்கம்மாள் தான் என நினைத்து மூர்த்தி பலமுறை ராக்கம்மாளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மூர்த்தி நேற்று (மார்ச் 13) மாலை அவரது வீட்டிற்குள் நுழைந்து, தனது மனைவி தன்னை விட்டு பிரிவதற்கு காரணம் நீ தான் எனக்கூறி மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக 18 இடங்களில் ராக்கமாளை குத்தியுள்ளார்.

பின்பு ராக்கம்மாள் அலறியடித்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே கதறிக்கொண்டு வரும்போது மீண்டும் வழிமறித்து சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதில் படுகாயமடைந்து ரத்தவெள்ளத்தில் கிடந்த ராக்கம்மாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே ராக்கம்மாள் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த திருச்சுழி காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர், மருத்துவமனை சென்று ராக்கம்மாளின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். ராக்கமாளை கொலை செய்துவிட்டு தலைமறைவாகவுள்ள அவரது மருமகன் மூர்த்தியை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆவடியில் இரட்டைக் கொலை - தீவிரத் தேடுதலில் காவல் துறையினர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.