மீட்கப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் சிலை - வாங்க மறுத்த வட்டாட்சியர்!

author img

By

Published : Jul 30, 2021, 9:27 PM IST

sivakasi-god-statue-recover

சிவகாசி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் மீட்கப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் சிலை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் வட்டாட்சியர் வாங்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

விருதுநகர் : சிவகாசி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள செங்கமால் ஊரணி கடந்த 2017ஆம் ஆண்டு தூர்வாரி பராமரிப்பு பணிகள் நடந்தபோது சுமார் இரண்டடி உயரமுள்ள அர்த்தநாரீஸ்வரர் ஐம்பொன் சிலை பூமிக்கடியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

நூற்றாண்டுகளைக் கடந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சிலையை கிராம மக்கள் ஒப்புதலுடன் அந்த கிராமத்தில் குடியிருக்கும் கோயில் பூசாரி மணிகண்டன் (30) என்பவர் தனது வீட்டில் வைத்து பூஜைகள் செய்து பராமரித்தார். இந்தச் சம்பவம் குறித்து மதுரை மண்டல சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் ஆய்வாளர்கள் இளங்கோ, சத்திய பிரபா ஆகியோர் பூசாரி மணிகண்டன் வீட்டிற்கு சென்று பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிலையை மீட்டனர். மீட்கப்பட்ட சிலையை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க வந்த நிலையில் சிலை கண்டெடுக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டதால் அந்த சிலையை தன் வசம் பெற்றுக்கொள்ள சிவகாசி வட்டாட்சியர் ராஜ்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும், வருவாய்த்துறை உயர் அலுவலர்களிடம் கருத்து கேட்பதாக கூறியதன் பேரில் தாங்கள் கஷ்டப்பட்டு மீட்டெடுத்த சிலையை யாரிடம் ஒப்படைப்பது என்பது குறித்து தெரியாமல் தங்களது வாகனத்திலேயே சிலையை பாதுகாப்புடன் வைத்தபடி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் பல மணி நேரம் சிவகாசி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருந்தனர்.

இதையும் படிங்க: ஆக்கிரமிப்பில் 40,000 ஏக்கர் கோயில் நிலம்: மீட்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.