களைகட்டும் தீபாவளி: மயில் தோகை விரித்து ஆடும் புதுபுது டிசைன்கள்... மவுசு குறையாத சிவகாசி பட்டாசு...

author img

By

Published : Oct 24, 2022, 7:23 AM IST

Updated : Oct 24, 2022, 1:45 PM IST

களைகட்டும் தீபாவளி: மயில் தோகை விரித்து ஆடும் புதுபுது டிசைன்களில் மவுசு குறையாத சிவகாசி பட்டாசு..

எப்போதும் மவுசு குறையாத சிவகாசி பட்டாசு தொழில், மயில் தனது தோகையை விரித்து ஆடுவது போன்ற புது ரக பட்டாசுகளுடன் மீண்டும் புரட்சி உண்டாகியுள்ளது.

விருதுநகர்: உலகெங்கிலும் இன்று (அக் 24) கொண்டாடப்பட்டு வரும் தீபாவளி பண்டிகையில், பட்டாசுக்கு இடம் கொடுக்காமல் இருந்து விட முடியாது. நல்லெண்ணெய் குளியல், இனிப்பு வகைகள், ஆவி பறக்கும் இட்லி, சுடச்சுட பிரியாணி என்று தீபாவளி நகர்ந்தாலும் அதன் மையப்புள்ளியாக விளங்குவது வண்ணமயமான பட்டாசுகளே.

இந்த பட்டாசுகள் விற்பனையின் முன்னோடியாக தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி எப்போதும் நம்பர் ஒன் தான். இப்படிப்பட்ட பட்டாசு தயாரிப்பில் சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வாழும் 85% பேர் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு ஆண்டு முழுவதும் தயாரிக்கப்படும் பட்டாசுகளின் விற்பனை, ஒவ்வொரு ஆண்டின் ஆடி 18ஆம் தேதியான ஆடிப்பெருக்கு தினத்தன்று, சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளில் பூஜை போட்டு தொடங்கப்படுகிறது.

மவுசு குறையாத சிவகாசி பட்டாசு குறித்த சிறப்பு தொகுப்பு

முதலும் முதலாக விநாயகர் சதுர்த்தி அன்று தொடங்கி, தொடர்ந்து ஆயுத பூஜை காலங்களிலும் பட்டாசு விற்பனை பற்றத் தொடங்கும். தீபாவளி பண்டிகை தினத்தை நெருங்க நெருங்க, வான வேடிக்கையாய் ஜொலிக்கும். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனோ கட்டுப்பாடுகள் மற்றும் பல மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதித்ததை அடுத்து, பட்டாசு விற்பனை சரிவை சந்தித்தது.

இந்த நிலையில் நடப்பாண்டில் பட்டாசு விற்பனை களை கட்டி இருப்பதாகவும், பட்டாசு தொழிலாளிகளுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக சென்னை, கோவை, திருச்சி, நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் நேரடியாக சிவகாசிக்கு வந்து பட்டாசுகளை வாங்கிச் செல்வதாகவும் வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பட்டாசு விற்பனையாளர்கள் கூறுகையில், “இந்தாண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மயில் தோகை விரித்து ஆடுவதுபோல் உருவாக்கப்பட்டுள்ள பட்டாசு, ட்ரான் வகை பட்டாசு, வாட்டர் டின் வடிவ பட்டாசு ஆகியவற்றை குடும்பத்துடன் ரசிக்கும்போது மனதில் உள்ள கவலைகளை மறக்கலாம்.

இதுபோன்ற பல புது வித வகையிலான பட்டாசுகளும் விற்பனையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 5 வண்ணங்கள் கொண்ட வெடி போன்றவை 300 அடி உயரம் வரை சென்று, ஆகாயத்தில் வெடித்து மழை தூரல்போல இரண்டு நிமிடம் ஆகாயத்தில் நின்று விழும் பட்டாசுகளும், ஸ்மோக் அல்லது டின் போன்ற புது வகையான பட்டாசுகளும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் விற்பனைக்கு வந்துள்ளது” என்றனர்.

இருப்பினும் கரோனோ தொற்றால் ஊரடங்கு போன்ற காரணங்களால் பட்டாசு தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட தொடங்கி, பசுமை பட்டாசு தயாரிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவால் பட்டாசு தொழிலுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பல மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு, அதன் காரணமாக பட்டாசு உற்பத்தியில் நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு தடைகளைத் தாண்டி இந்தாண்டு பட்டாசு விற்பனை ஓரளவு சரிவில் இருந்து மீண்டு, விற்பனை அதிகரித்திருப்பது கடை உரிமையாளர்கள், பட்டாசு ஆலை உரிமையாளர்கள், பட்டாசு தொழிலாளர்கள் என அனைவரது மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசிக்கு மீண்டும் புத்துணர்ச்சி கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: பட்டாசுகளுக்கு தடை: சிவகாசியில் 1.5 லட்சம் பேர் வேலையின்றி தவிப்பு

Last Updated :Oct 24, 2022, 1:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.