விழுப்புரம்: பொங்கல் பண்டிகைக்கு நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் இலவச வேட்டிச் சேலைகள் 2017ஆம் ஆண்டுமுதல் முறையாக வழங்கப்படவில்லை எனக் கூறி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சமூக ஆர்வலர் அரை நிர்வாணத்துடன் பொங்கல் பானை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
விழுப்புரம் மாவட்டம் வளவனூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பிரகாஷ் என்பவர் கடந்த ஒரு வார காலமாகத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியருக்கு இலவச வேட்டிச் சேலை வழங்க வலியுறுத்தி கோரிக்கைவிடுத்துள்ளார்.
இலவச வேட்டிச் சேலைகள் வழங்கப்படவில்லை என்றால் இன்று அரை நிர்வாணத்துடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக பொங்கல் வைத்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தார். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பகுதியைச் சேர்ந்த சில நியாயவிலைக் கடைகளில் மட்டும் இலவச வேட்டிச் சேலை வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள நியாயவிலைக் கடைகளில் இலவச வேட்டிச் சேலைகள் வழங்கப்படவில்லை. 2017ஆம் ஆண்டிலிருந்தே முறையாக வேட்டிச் சேலை வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பிரகாஷை விழுப்புரம் வட்டம் காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இது குறித்து வட்ட வழங்கல் அலுவலர், மாவட்ட வழங்கல் அலுவலர் ஆகியோரைத் தொடர்புகொண்டது யாரும் பதில் அளிக்கவில்லை. உடனடியாக வரும் திங்கள்கிழமையிலிருந்து அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நாங்களும் பொங்கல் கொண்டாடுவோமில்ல... டாப்சிலிப்பில் யானைகள் பங்கேற்ற பொங்கல் விழா!