அரசுப்பள்ளியில் சத்துமாத்திரை சாப்பிட்ட 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்

author img

By

Published : Sep 23, 2022, 9:36 PM IST

அரசு பள்ளியில் 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்

விழுப்புரம் அருகே அரசுப்பள்ளியில் சத்து மாத்திரை சாப்பிட்ட 25-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்படவே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

விழுப்புரம்: கெடாரை அடுத்த வெங்கந்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 219 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று கெடார் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக மருத்துவ முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கான சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

உணவு இடைவெளியின்போது மாத்திரைகள் வழங்கப்பட்ட நிலையில், உணவு உட்கொண்ட மாணவ - மாணவிகள் சத்து மாத்திரைகளை உட்கொண்டு உள்ளனர்.

பின்னர் மாலை பள்ளி விடும் நேரத்தின்போது ஒரு சில மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் 9 மாணவர்கள், 20 மாணவிகள் என மொத்தமாக 29 மாணவர்களுக்குச் சிகிச்சை அளித்தனர். மாணவர்களுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஒவ்வாமை காரணமாக வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து பள்ளி மாணவர்கள் சிகிச்சைப்பெற்று வரும் அரசு மருத்துவமனையில் விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி, ஆட்சியர் மோகன் நேரில் சென்று மாணவர்களின் உடல் நலம் குறித்து விசாரணை செய்து ஆறுதல் கூறினர்.

இந்நிலையில் இன்று சிகிச்சைப்பெற்று வந்த மாணவர்கள் நலமடைந்து அவர்கள் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: கஞ்சாவுக்கு அடிமையாகி மயங்கிக்கிடந்த 11 மாணவர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.