போதை அண்ணனை குத்திக் கொன்ற தம்பி தப்பி ஓட்டம்

author img

By

Published : Aug 31, 2021, 12:58 AM IST

அண்ணனை குத்திக் கொன்ற தம்பி தப்பி

மது போதையில், தாயிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்த தம்பியை திமிரி காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ராணிப்பேட்டை: போதை அண்ணனைக் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய தம்பியை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

ஆற்காட்டை அடுத்த காவனூர் காந்தியார் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி(60). இவரது கணவர் பெருமாள்(68). இவர்களுக்கு ஏழு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். அவர்களில் மகள் மற்றும் கடைசி மகனுக்கு மட்டும் திருமணமாகியுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு பெருமாள் இறந்து விட்டார்.

சகோதரர்களில் தேவநாராயணன்(38), கணபதி (22), இவர்களின் ஒரு தம்பி மட்டும் தாய் லட்சுமியுடன் தனியாக வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் தேவநாராயணன், அடிக்கடி மது அருந்திவிட்டு தாய் லட்சுமி தன்னை சரியாக கவனித்துக் கொள்வதில்லை என்றும், சரியாக உணவு வழங்குவதில்லை என்றும் தகராறில் ஈடுபட்டுவந்துள்ளார்.

நேற்று முன்தினமும் (ஆக.29) மது அருந்திவிட்டு வந்த தேவநாராயணன் லட்சுமியிடம் தகராறில் ஈடுப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது தம்பி கணபதி தகராறில் ஈடுபட வேண்டாம் என எச்சரித்துள்ளார். இதனால் சகோதரர்கள் இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட்டுள்ளது.

அப்போது கோபத்தில் தம்பி கணபதி அண்ணன் தேவநாராயணனை கத்தியால் குத்தியுள்ளார். இதில் நிகழ்விடத்திலேயே அண்ணன் உயிரிழந்துள்ளார். அண்ணன் இறந்ததை அறிந்த கணபதி வீட்டின் பின்பக்கமுள்ள மலையடிவாரத்திற்குச் சென்று அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ராணிப்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு மற்றும் திமிரி காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு வந்து தேவநாராயணனின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு கொலை குறித்து விசாரணை நடத்தி, தப்பி ஓடிய கணபதியைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: வடமாநிலத்தவர்கள் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு - இருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.