சமூக அக்கறைக்கு வயதுபொருட்டு இல்லை: ஆக்கிரமிப்புகளை அறவழியில் அடித்து நொறுக்கிய சிறுமி செம்மொழி

author img

By

Published : Aug 5, 2022, 8:10 PM IST

சமூக அக்கறைக்கு வயது பொருட்டு இல்லை

ஏரி, குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி 60 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் செய்து தான் மேற்கொண்ட போராட்டத்தில் வெற்றி அடைந்துள்ளார், 12 வயது சிறுமி செம்மொழி. இதுகுறித்த சிறப்புத்தொகுப்பைக் காணலாம்.

விழுப்புரம்: வானிலை அறிக்கை எப்போது வரும், பள்ளிக்கு விடுமுறை அளிப்பார்களா...? பப்ஜி, ஃபிரீ பையர், கேண்டி க்ரஷ் விளையாட்டுகளை கைபேசியில் விளையாடலாமா என எதிர்பார்க்கும் தற்போதைய தலைமுறை சிறுவர்களுக்கு மத்தியில்... உலகின் எதிர்காலமே எனது நோக்கம் என்று 60 கி.மீ., சைக்கிளில் பயணம் செய்து, தான் மேற்கொண்ட போராட்டத்தில் வெற்றி அடைந்துள்ளார் சிறுமி செம்மொழி....

விழுப்புரம் மாவட்டம்,மேல்மலையனூர் வட்டம், அன்னம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த புவனேஷ் என்பவரின் 12 வயது மகள் செம்மொழி.

அன்னப்பள்ளம் ஏரிக்கு அருகில் உள்ள தங்கள் நிலத்தில் இயற்கை வேளாண்மை செய்து வரும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இவர், தன் தந்தை இயற்கையின் மீது ஈடுபாடு கொண்டவராக இருப்பதை சிறுவயதில் இருந்தே பார்த்து வளர்ந்துள்ளார்.

இதனால், உள்ளூர் கிராம மக்கள் இடையே இயற்கையைப் பாதுகாப்பது குறித்த பெரும் விழிப்புணர்வு ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறார்.

போராட்டத்திற்கான விதை: தன் நிலத்திற்கு அருகில் உள்ள ஏரியில் சில தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்ததால், ஏரி, குளம் போல சுருங்கிவிட்டது. பின்னர் ஊரில் குளத்தையும் ஆக்கிரமித்துவிட்டனர். இதனால் நிலத்தடி நீர் வற்றிக்கொண்டு வருகிறது போன்றவை குறித்த பல்வேறு விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தி வந்துள்ளார்.

2017ஆம் ஆண்டில், மழை இல்லாத சூழலில், தங்கள் வீட்டின் கிணறு வற்றிவிட்டதால், குடிநீருக்கே பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால், ஆடு, மாடுகள் குடிப்பதற்குக்கூட நீர் இல்லாத சூழலில் பனை மரங்களும் கருகிவிட்டன. தன்னுடன் பயிலும் சக மாணவர்களிடமும், கிராமவாசிகளிடம் இதுகுறித்த தனது வருத்தத்தை சிறுமி செம்மொழி வெளிப்படுத்தியுள்ளார்.

தங்கள் நிலத்தில் போதுமான நீர் இல்லாத காரணத்தால், வேளாண்மை செய்ய முடியாமல் பிழைப்புக்காக பெற்றோருடன் புதுச்சேரி மாநிலம் சென்று ஒரு ஆண்டு காலம் வாழ்ந்துள்ளார். இதனால் தன்னுடைய படிப்பு பாதிக்கப்பட்டதை மிகவும் மன வருத்தத்துடனேயே கடந்து வந்துள்ளார், செம்மொழி.

பின்னர் 2019ஆம் ஆண்டு பள்ளி படிப்பைத்தொடர வேண்டும் என்பதற்காக மீண்டும் தன் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார்.

சிறுமியின் முதல் கோரிக்கை மனு: தன்னுடைய ஊரில் உள்ள ஏரி, குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றி பராமரித்திருந்தால் நிலத்தடி நீர் வற்றாமல் இருக்கும். எனவே ஏரி, குளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில், 2020ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி அன்று, அரசாணை 540இன் கீழ் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் தன் தந்தையுடன் சென்று மனு அளித்துள்ளார், சிறுமி செம்மொழி.

அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியருக்கு 2020ஆம் ஆண்டு நவம்பர்‌ 28ஆம் தேதி அன்று ஒரு குறிப்பாணையும், 2021 ஜனவரி 19ஆம் தேதி அன்று ஒரு குறிப்பாணையும் அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

கண்டுகொள்ளாத அலுவலர்கள்: மேற்கூறிய மனுவைப் பரிசீலித்து மாவட்ட ஆட்சியரே கேட்டுக்கொண்டும், மேல்மலையனூர் வட்டாட்சியர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும், தானும் தன் தந்தை, ஊர் மக்கள் பலரும் வட்டாட்சியரை பலமுறை நேரில் சந்தித்தபோதும் தங்களை அலட்சியப்படுத்தினாரே தவிர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் சிறுமி செம்மொழி தெரிவித்தார்.

பருவநிலை மாற்றம் உலகையே அச்சுறுத்திவரும் நிலையில், இது சுற்றுச்சூழலிலும், உணவு உற்பத்தியிலும், பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஐ.நா. சபை எச்சரிக்கை விடுத்தது. இதனால், அனைத்து நாடுகளும் பருவநிலை மாறுபாட்டைத்தடுக்க பல முயற்சிகளை எடுத்து வருகின்றது. தமிழ்நாடு அரசும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

சமூக அக்கறைக்கு வயதுபொருட்டு இல்லை: ஆக்கிரமிப்புகளை அறவழியில் அடித்து நொறுக்கிய சிறுமி செம்மொழி

இதற்கென பல்வேறு அரசாணைகளும் சட்டங்களும் இயற்றப்பட்டுள்ளன. இருந்தும் அவற்றை அலட்சியப்படுத்தும் முகமாக எந்த நடவடிக்கையும் எடுக்காத மேல்மலையனூர் வட்டாட்சியர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, அன்னப்பள்ளம் கிராம சர்வே எண் 18 -இல் உள்ள ஏரியையும், சர்வே எண் 165- இல் உள்ள குளத்தையும், ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்குக்கொண்டு வர முடிவு செய்தார், செம்மொழி.

ஒரு‌ சூறாவளி கிளம்பியதே...: தன் தந்தையிடம் உரிய அனுமதி பெற்று 12 ஏக்கர் நிலம் உள்ள ஏரியானது 5 ஏக்கர் அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்கிற மனுவுடன், நேற்று முன் தினம்(ஆக.3) அதிகாலை 4 மணியளவில் தனது சைக்கிளில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிய தனது போராட்டப் பயணத்தைத் தொடங்கினார், செம்மொழி.

போராட்டத்தைத் தொடங்குவதற்கு சில நாள்களுக்கு முன்னதாகவே, கோரிக்கையை கண்டுகொள்ளாத அலுவலர்களை எச்சரிக்கும் விதமாக காணொலிப்பதிவை இணையதளத்தில் பதிவிட்டு இருந்தார். அலுவலர்களின் அலட்சியத்தை அகற்ற, அதிகாலை வேளை சிறு மழைத்தூரலுடன் பச்சைக்கொடி கட்டிய தன்னுடைய மிதிவண்டியில் ’நீர்நிலைகளை பாதுகாப்போம்’ என்கிற பதாகையுடன் தன்னுடைய போராட்டத்தைத் தன் தந்தையுடன் தொடங்கினார்.

அதிகாலை 4 மணிக்கு தொடங்கப்பட்ட பயணம் நண்பகல் 12:45 மணியளவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தது. குழந்தைகளுக்கே உண்டான அந்த களைப்பு சிறிதும் இன்றி, தன்னுடைய நோக்கத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மனுவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்தார், சிறுமி செம்மொழி.

அந்த நேரத்தில், மாவட்ட ஆட்சியர் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றிருந்த காரணத்தால் மாவட்ட வருவாய்த்துறை அலுவலரிடம் மனுவை கொடுத்து 'ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள்' எனக் கோரிக்கை வைத்தார். மேலும் தன்னுடைய தந்தையும் தெரியாமல் ஏரியை ஆக்கிரமிப்பு செய்ததையும், அதனை தற்போது எடுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

அரசாணை எண் 540 சட்டப்பிரிவின்படி பொது இடங்களில் ஆக்கிரமிப்பு நடந்துள்ளது என்றும்; அதனை அகற்றுங்கள் எனவும் கோரிக்கையும் வைத்தார்.

செம்மொழிக்கு கிடைத்த வெற்றி: மாவட்ட வருவாய்த்துறை அலுவலர், ’இன்னைக்கி நீ ஸ்கூல் போகலையா’ என்று கேட்டதற்கு, 'நீர் இருந்தால் தானே, உயிர் வாழ முடியும். உயிர் வாழ்ந்தால் தானே படிக்க முடியும்' என்று பக்குவமாகப் பதில் அளித்தார். மேலும் தன் தந்தை செய்த பிழையினையும் சுட்டிக்காட்டிய செம்மொழியை மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் மிகவும் பாராட்டினர்.

அனைத்து ஊடகங்களிலும் இச்செய்தி பரவிய சில மணித்துளிகளில் அன்னக்குளம் ஏரியை ஆக்கிரமிப்பு செய்த சிலர் தாங்களாகவே ஆக்கிரமிப்பை அகற்றினர். மேலும் சிலரின் ஆக்கிரமிப்புகள் அரசு அலுவலர்களால் அகற்றப்பட்டது.

தான் மேற்கொண்ட பயணத்தை வெற்றிகரமாக முடித்து, அன்று(ஆக.3) இரவு 7 மணியளவில் தன் ஊருக்குத் திரும்பிய செம்மொழியின் கண்களில் மகிழ்ச்சியின் ஒளியே நிரம்பி வழிந்துள்ளது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தான் எதிர்பார்த்த இயற்கை சூழல் நிறைந்த ஏரியைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளார், சிறுமி செம்மொழி.

இதையும் படிங்க: ஒரு கையில் உலக சாதனை - 2ம் வகுப்பு சிறுமிக்கு குவியும் பாராட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.