சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் காத்திருக்கிறதா லித்தியம்..!

author img

By

Published : Sep 18, 2021, 2:49 PM IST

மின்சார வாகனங்கள்  environment  lithium recycling  Extended Producer Responsibility  Fossil Fuel  Carbon dioxide  Electronic Vehicles  லித்தியம் அயன் பேட்டரி  மறுசுழற்சி  லித்தியம் அயன் பேட்டரி மறுசுழற்சி

இந்தியாவில் பெருகி வரும் மின்சார வாகனங்கள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறதா இல்லை பயனளிக்கிறதா என்பது குறித்து இத்தொகுப்பில் காணலாம்.

வேலூர்: உலகில் பருவநிலை மாற்றம், ஓசோன் ஓட்டை, சுற்றுச்சூழல் மாசுபாடு, காற்று மாசுபாடு என அனைத்திற்கும் மிக முக்கிய காரணியாக அமைவது கார்பன் (Carbon) எனப்படும் கரிமம்.

கார்பன் டை ஆக்சைட் (Carbon dioxide) வாயு எரிமலைகளை விட 60 மடங்கு அதிகமாக மனிதர்களின் நடவடிக்கைகளால் தான் வெளியேற்றப்படுகிறது என்கிறது அமெரிக்க அரசாங்கத்தின் அறிவியல் மற்றும் ஒழுங்குமுறை நிறுவனமான, நேஷனல் ஓசனிக் மற்றும் அட்மாஸ்பரிக் அட்மினிஸ்ட்ரேஷன் (National Oceanic and Atmospheric Administration).

கார்பன் வெளியேற்றத்தை குறைக்க முடியுமா?

இதையடுத்து புதைபடிவ எரிபொருளில் (Fossil Fuel) இயங்கக்கூடிய வாகனங்கள் மட்டும் ஆண்டிற்கு கிட்டதட்ட 4.6 மெட்ரிக் டன் அளவிலான கார்பன் டை ஆக்சைட் (Carbon dioxide) வாயுவை வெளியேற்றுகிறது என்கிறது ஐக்கிய அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம்.

இது போன்று வாகனங்களிலிருந்து வெளியேறும் கார்பன் அளவை கட்டுப்படுத்துவதற்காகவும், அதனை முற்றிலும் குறைப்பதற்காகவும், பேட்டரியால் இயங்கக்கூடிய மின்சார வாகனங்கள் (Electronic Vehicles) தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இத்தகைய வாகனங்களின் பயன்பாடு சமீப காலமாக பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது. இவ்வாகனங்கள் பெரும்பாலும் லித்தியம் அயன் (Li-ion) வகை பேட்டரியால் இயங்கக் கூடியவை. இந்த வகை பேட்டரிகள் பயன்படுத்தப்படுவதால் கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தி குறைக்க முடியுமா என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது.

லித்தியம் அயன் பேட்டரி மறுசுழற்சி

ஒருபக்கம் பெட்ரோல் இன்ஜின்கள் வெளியிடக்கூடிய கார்பன் அளவைவிட 7 விழுக்காடு அதிகமாக லித்தியம் உலோகம் தயாரிக்கப்படும் போது கார்பன் வெளியாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வளர்ந்த நாடுகள் பலவும் இதுபோன்ற மின்சார வாகனங்கள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாகவே அதில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் பேட்டரிகளை மறுசுழற்சி செய்வதற்கான வழிமுறைகளை முறையாக வகுத்து அதனை தற்போது சிறப்பாக நடைமுறைப்படுத்தி உள்ளன.

ஆனால், இதுபோன்ற மறுசுழற்சி முறைகளில் சற்று பின்தங்கியுள்ள இந்தியா போன்ற நாடுகள் தற்போது தான் இதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.

உலகலாவிய கட்டமைப்பினை அமல்படுத்த கோரிக்கை

மின்சார வாகனங்கள்  environment  lithium recycling  Extended Producer Responsibility  Fossil Fuel  Carbon dioxide  Electronic Vehicles  லித்தியம் அயன் பேட்டரி  மறுசுழற்சி  லித்தியம் அயன் பேட்டரி மறுசுழற்சி
பூவுலகின் நண்பர்களைச் சேர்ந்த சூழலியல் பொறியாளரான வீ. பிரபாகரன்

இது குறித்து பூவுலகின் நண்பர்களைச் சேர்ந்த சூழலியல் பொறியாளரான வீ. பிரபாகரன் ஈடிவி பாரத் செய்தியாளரிடம் கூறுகையில், “நம் நாட்டில் லித்தியம் அயன் பேட்டரிகளை மறுசுழற்சி செய்யக்கூடிய நிறுவனங்கள் இருந்தாலும், பேட்டரிகளை மக்களிடமிருந்து பெறுவதில் தான் தற்போது சிக்கல் உள்ளது.

இத்தகைய சிக்கல்களை போக்குவதற்கும், மறுசுழற்சியை ஊக்கப்படுத்தவும் எக்ஸ்டெண்டட் ப்ரொடியூசர் ரெஸ்பான்சிபிலிட்டி (Extended Producer Responsibility) எனப்படும் தயாரிப்பாளர்களின் பொறுப்பை அடிப்படையாகக் கொண்ட, மின்கழிவு மேலாண்மைக்கான உலகலாவிய கட்டமைப்பினை இந்தியாவில் அமல்படுத்த கோரிக்கைகளை முன் வைத்து வருகிறோம்.

இச்சட்டம் இயற்றப்பட்டால் மறுசுழற்சி என்பது தயாரிப்பாளர்களின் பொறுப்பாக ஆகிவிடும். இதனால், லித்தியம் அயன் பேட்டரிகளை எளிமையாக மறுசுழற்சி செய்ய முடியும். ஆனால், இன்றுவரை அவை முறையாக செயல்படுத்தப்படவில்லை.

குப்பைகளில் கொட்டப்படும் லித்தியம்

இந்தியாவில் மின்கழிவு மேலாண்மை சற்று மோசமான நிலையில் தான் உள்ளது. அதாவது, உற்பத்தி ஆகக்கூடிய மின்சாரப் பொருட்களில் 8 விழுக்காடு மட்டுமே முறையாக மறுசுழற்சி செய்யப்படுகிறது.

லித்தியம் அயன் பேட்டரிகளை மறுசுழற்சி செய்வதற்கான ஆட்கள் இல்லாததால் அங்கீகரிக்கப்படாத பலரும் இதனை மறுசுழற்சி செய்து வருகின்றனர். இவர்களைப் போன்றவர்கள் பேட்டரிகளில் இருக்கக்கூடிய தேவையானவற்றை மட்டும் பிரித்துவிட்டு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய லித்தியத்தை மறுசுழற்சி செய்யாமல் குப்பைகளில் கொட்டிவிடுகின்றனர்.

கார்பனை உமிழக்கூடிய பழைய வாகனங்களை ஒப்பிடுகையில், மின்சார வாகனங்கள் ஒரு நல்ல மாற்றுதான். அதற்கு கிடைக்கக்கூடிய மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க வளங்களைக் (Renewable resources) கொண்டு உற்பத்தி செய்யவேண்டும். இல்லையென்றால் மின்சார வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தும் பயனற்று போய்விடும்.

நாம் பயன்படுத்தும் வாகனங்களில் இருந்து வெளியாகக்கூடிய கார்பன் டை ஆக்சைடு (Carbon dioxide) வாயுவைவிட புதைபடிவ எரிபொருளைக் (Fossil Fuel) கொண்டு மின்சாரம் தயாரிக்கும்போது வெளியாகக் கூடிய வாயுவின் அளவு அதிகமாகவே உள்ளது. ஆகையால் நாம் மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க வளங்களை கொண்டு தயாரிக்க வேண்டும்.

சரியான முறையில் செய்தால் மட்டுமே சாத்தியம்

ஐரோப்பிய யூனியனில் உள்ள ஸ்வீடன், ஃபின்லேன்ட், லாட்வியா, டென்மார்க், ஆஸ்ட்ரியா போன்ற சில வளர்ந்த நாடுகள் 30 முதல் 50 விழுக்காடு தங்களது மின்சார உற்பத்திக்கு புதுப்பிக்கத்தக்க வளங்களையே பயன்படுத்துகின்றன. இந்தியா சுமார் 38 விழுக்காடு புதுப்பிக்கத்தக்க வளங்களை கொண்டு மின்சாரம் தயாரித்து வருகிறது.

எக்ஸ்டெண்டட் ப்ரொடியூசர் ரெஸ்பான்சிபிலிட்டியை (Extended Producer Responsibility) உடனடியாக அமல்படுத்தி, நாம் பயன்படுத்தக்கூடிய மின்சாரத்தை மேலும் அதிகமாக புதுப்பிக்கத்தக்க வளங்களைக் கொண்டு தயார் செய்தால், எலக்ட்ரானிக் வாகனங்கள் என்பது ஐந்து வருடங்களிலேயே நமக்கு நல்ல பலன்களை தர ஆரம்பித்து விடும்” என்றார்.

மின்சார வாகனம் என்பது உலகலாவிய சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் கட்டுப்படுத்தவே கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்த வாகனத்திற்கு பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் பேட்டரியை முறையாக மறுசுழற்சி செய்யவில்லை என்றாலும், நம்முடைய மின்சார தயாரிப்பு முறையை மேம்படுத்தவில்லை என்றாலும் மின்சார வாகனங்களை கொண்டு வந்ததற்கான பயனே இல்லாமல் போய்விடும்.

ஆகையால், இந்திய அரசாங்கம் உடனடியாக இந்த பிரச்னைகளை கருத்தில் கொண்டு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சூழலியல் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: யூ-ட்யூபில் மாதம் ரூ.4 லட்சம் சம்பாதிக்கும் நிதின் கட்கரி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.