திருச்சி: மணப்பாறை அடுத்த ஆளிப்பட்டியில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோயிலில் நேற்று (செப்.11) காலை துப்பாக்கி ஒன்று உறையுடன் கிடந்துள்ளது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து தகவலறிந்து வந்த மணப்பாறை காவல் துறையினர், சம்பவ இடத்தைப் பார்வையிட்டு இது தொடர்பாக திருச்சி குற்றத் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து நுண்ணறிவுப் பிரிவு காவலர்கள் துப்பாக்கியை பாதுகாப்பான முறையில் கையாண்டு பரிசோதனை செய்ததில், சிறிய அளவிலான இரும்பு பால்ரஸ் குண்டுகளை போட்டு உபயோகப்படுத்தும் 1,500 ரூபாய் மதிப்புள்ள ஆன்லைன் துப்பாக்கி அது என்பது தெரியவந்தது.
அதன் பின்னர் துப்பாக்கி, அதன் உறையைக் கைப்பற்றி மணப்பாறை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து துப்பாக்கியை வைத்திருந்தவர்கள் யார் என்று விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: கடைய தெறங்க... மத்தத அப்புறம் பாக்கலாம்’ - டெஸ்லாவுக்கு வலைவிரிக்கும் அரசு!