விரைவில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

author img

By

Published : Jan 20, 2023, 8:14 PM IST

Etv Bharat

இதுவரையில் 71,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிய நிலையில், மேலும் குறிப்பிட்ட நாட்களுக்குள் 10 லட்சம் பேருக்கு நிச்சயம் வேலைவாய்ப்புகளை வழங்குவோம் என்று திருச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

நாடுமுழுவதும் விரைவில் 10 லட்சம் பேருக்கு நிச்சயம் வேலைவாய்ப்புகள் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தகவல்

திருச்சி: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission - SSC) மூலம் கடந்த ஆண்டு தேர்வு எழுதி அவற்றில் தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்வுகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா இன்று (ஜன.20) திருச்சியிலுள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. இந்தியா முழுவதும் 45 இடங்களில் நடந்த இந்த நிகழ்ச்சியின் ஒருபகுதியாக, திருச்சி, சென்னை, கோவை உள்ளிட்ட மூன்று இடங்களில் இந்தப் பணி ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

அந்த வகையில் ரயில்வே, சுங்க வரி, வணிக வரி, உள்ளிட்டப் பல்வேறு துறைகளில் மொத்தம் 71 ஆயிரம் பேர் தேர்வாகி உள்ளனர். இந்நிலையில் இன்று ஒரே நாளில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்குப் பணி ஆணை வழங்கினார்.

அதன்படி, திருச்சியில் நடந்த இந்த விழாவில் தேர்வாகிய 125 நபர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன. அதில் 25 நபர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக பணியாணை வழங்கினார். மீதமுள்ள நபர்களுக்கு அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகள் பணி ஆணைகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் மத்திய மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு 25 நபர்களுக்கு பணி ஆணையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சுங்க வரி துறையின் திருச்சி மண்டல ஆணையர் அனில் வரவேற்புரையாற்றினார்.

71,000 பேருக்கு வேலை: இதனைத்தொடர்ந்து, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ' 'ரோஜ்கர் மேளா' (PM Rozgar Mela) என்ற மத்திய அரசின் மெகா வேலைவாய்ப்பு முகாம் மூலம், 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது வரை 71,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வேலைவாய்ப்பு என்பது மத்திய அரசு மட்டுமல்லாது, இந்தியாவில் முழுவதும் ஆட்சி புரியும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆளுகின்ற மாநிலங்களிலும், மாநில அளவிலான வேலைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

கூடுதலாக 10 லட்சம் பேருக்கு வேலை: நாங்கள் போகிற போக்கில் சொல்லிவிட்டு, பின்னர் அந்த வார்த்தைகளில் பின்வாங்குபவர்கள் இல்லை. நாங்கள் சொல்லியது சொல்லியபடி, குறிப்பிட்ட நாட்களுக்குள், 10 லட்சம் பேருக்கு நிச்சயம் வேலைவாய்ப்புகளை வழங்குவோம்.

75-வது சுதந்திர தினவிழா கொண்டாடுகின்ற இவ்வேளையில், தற்போது பணியில் சேர்பவர்கள் இன்னும், 25 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள். வருங்கால இந்தியாவை வலிமையாக வழி நடத்துபவர்களாக இருப்பார்கள்' எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மூத்த சுங்கவரித்துறை அதிகாரிகள் மற்றும் வணிக வரி துறையைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்டப் பலர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இறுதியாக சுங்கவரி துறையின் இணை ஆணையர் பிரதீப் நன்றி உரை வழங்கினார்.

இதையும் படிங்க: ஒன்றிய அரசின் மின்சார திருத்த சட்டத்தை ஒருபோதும் திமுக ஏற்காது: அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.