ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற சட்டம் திருத்தம் வேண்டும்  - கி.வீரமணி

author img

By

Published : Jan 23, 2023, 9:09 AM IST

ஆளுநருக்கு எதிராக சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் - கி.வீரமணி

ஆளுநர் தவறு செய்தால், அவருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற ஏதுவாக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

திருச்சி: புத்தூர் பெரியார் மாளிகையில் திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த கி.வீரமணி, “திராவிடர் கழகம் சார்பில் பிப்ரவரி 3ஆம் தேதி முதல் மார்ச் 10ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் சமூக நீதி பாதுகாப்பு - திராவிட மாடல் விளக்க பரப்புரை பயணம் நடைபெற உள்ளது.

கி.வீரமணி செய்தியாளர் சந்திப்பு

இதில் சமூக நீதி பறிக்கப்படுவது, இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோவது, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்குவது போன்றவை குறித்து மக்களிடையே பிரச்சாரம் செய்யப்படும். சாதி பாம்பு, மீண்டும் தன்னுடைய விஷத்தை கக்கும் சூழலில், அதனை தடுக்க கடுமையான சட்டங்களை இயற்றுவது குறித்து அரசை வலியுறுத்துவது, மகளிர் நலன், ஒடுக்கப்பட்டோர் உரிமை, இளைஞர்களின் எதிர்காலம் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி இந்த பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம்.

திராவிடர் கழக இளைஞரணி மண்டல மாநாடு திருச்சி மாவட்டம் துறையூரில் நடைபெறும். சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை தற்போது எதிர்க்க எந்த கட்சியும் தயாராக இல்லை. எல்லோருடைய ஆதரவும் இருக்கிறது. ஒரு சிலர் மட்டும் இதில் குறுக்குசால் ஓட்டுகிறார்கள். இருந்தாலும்கூட தற்போது யாரும் எதிர்க்காதது, திராவிடர் கழகத்திற்கு கிடைத்த வெற்றி என கூறுவதை விட, இது தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி.

குடியரசுத் தலைவர் தவறு செய்தால் அவர் மீது குற்றம் சாட்ட, அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. தற்போது ஆளுநர்கள் போட்டி அரசாங்கத்தை நடத்துகிறார்கள். ஆனால் ஆளுநர் தவறு செய்தால், அவருக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற அரசியலமைப்பு சட்டத்தில் அனுமதி இல்லை.

எனவே ஆளுநர் தவறு செய்தால், அவரை நீக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் வகையில், அரசியலமைப்பு சட்டத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும். நாடாளுமன்றத்தில் இது குறித்து தனி நபர் தீர்மானமாவது கொண்டு வர வேண்டும். ஈரோடு இந்தியாவிற்கே வழிகாட்டும் வழிகாட்டியைக் கொண்டிருக்கிறது” என்றார்.

இந்த கூட்டத்தில் சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சருக்கு நன்றி உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக உடல் தானம் வழங்குவதற்கான திராவிடர் கழகம் சார்பில் உருவாக்கப்பட்ட பிரத்யேக இணையதள பக்கத்தை வீரமணி தொடங்கி வைத்தார். மேலும் இக்கூட்டத்தில் உடற்கொடை வழங்கும் படிவத்தில் திராவிடர் கழக இளைஞரணியைச் சேர்ந்த 300 இளைஞர்கள் கையெழுத்திட்டு வீரமணியிடம் வழங்கினர்.

இதையும் படிங்க: காலில் விழாமல் ஓட்டு எப்படி கிடைக்கும்.? - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.