கருணாநிதி பெயர் சூட்டும் தீர்மானம் நிறுத்தம்..! அது அண்ணாமலைக்கு தெரியாது..- அமைச்சர் சொன்ன சேதி!

author img

By

Published : May 14, 2022, 2:11 PM IST

Updated : May 14, 2022, 3:09 PM IST

முதலமைச்சரின் உத்தரவே தெரியாமல் அண்ணாமலை அரசியல் செய்கிறார் - அமைச்சர் நேரு காட்டம்!

திருவாரூர் தெற்குரத வீதிக்கு கருணாநிதி பெயர் வைக்கும் நகராட்சி தீர்மானத்தை நிறுத்தி வைக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளது கூட தெரியாமல், பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் செய்கிறார் என அமைச்சர் கே.என்.நேரு விமர்சித்துள்ளார்.

திருச்சி: மத்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான 66 செண்ட் நிலத்தை பெறுவதற்காக, கடந்த எட்டு ஆண்டுகளாக நிறைவடையாமல் இருந்த திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா மேம்பால பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இப்பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “எங்களுடைய முயற்சியால் பத்தாண்டுகளாக முடிவு பெறாமல் இருந்த அரிஸ்டோ மேம்பாலம் பணி இன்னும் 3 மாதத்தில் முடிவு பெற்றுவிடும்” என்றார். தொடர்ந்து அவரிடம் எழுப்பப்பட்ட பேருந்து கட்டண உயர்வு குறித்த கேள்விக்கு, ”தமிழக முதலமைச்சர் மற்றும் போக்குவரத்துத் துறை சார்ந்த அமைச்சர் இருக்கிறார். இது தொடர்பாக முடிவு செய்து உங்களிடம் அறிவிப்பார். எந்த கட்டணம் உயரப் போகிறது என்று எனக்கு தெரியாது” எனப் பதிலளித்தார்.

கருணாநிதி பெயர் சூட்டும் தீர்மானம் நிறுத்தம்..! அது அண்ணாமலைக்கு தெரியாது..- அமைச்சர் சொன்ன சேதி!

ஆண்டுதோறும் வரி உயர்வு: மேலும் அவர் பேசுகையில், “சென்னையில் வரி உயர்த்தி 22 ஆண்டுகள் ஆகின்றன. மற்ற ஊர்களில் 13 ஆண்டுகள் ஆகின்றன. 1998ஆம் ஆண்டு நாங்கள் இயற்றிய சட்டத்தை கிடப்பில் போட்டு விட்டனர். ஆனால், அந்த சட்டத்தை ஆந்திரா எடுத்துச் சென்று அமல்படுத்திவிட்டது.

அதன்பிறகு, 2008ஆம் ஆண்டு இயற்றிய சட்டத்தை அதிமுக தேர்தலுக்காக கிடப்பில் போட்டுவிட்டனர். எனவே, ஒட்டுமொத்தமாக 10 ஆண்டுகளுக்கான வரியை உயர்த்தினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்பதால், ஆண்டுக்கு ஒருமுறை வரி உயர்வை அமல்படுத்தியுள்ளோம்.

ஆண்டுதோறும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அகவிலைப்படி உயர்வு பெறுகின்றனர். மக்களுக்கு நன்மை செய்யவே இந்த சட்டத்தை இயற்றியுள்ளோம். ஆண்டுதோறும் வரி உயர்வு என்பது, மக்கள் பணத்தை அரசு எடுத்துச் செல்வதற்காக இல்லை. நகர்ப்புற அமைப்புகள் நிதிவளம் பெற்று, தன்னிச்சையாக செயல்பட இந்தச் சட்டம் உதவும்" எனத் தெரிவித்தார்.

அண்ணாமலை அரசியல்: இதனையடுத்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “திருவாரூர் தெற்குரத வீதிக்கு கருணாநிதி பெயர் வைக்கும் நகராட்சி தீர்மானத்தை நிறுத்தி வைக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதைக்கூட தெரியாமல் பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் செய்கிறார். அவர் கூறியபடி, அரசு அலுலர்களை தடுத்தால் அவர் மீது வழக்கு பாயும்.

திருச்சி விமான நிலையம் நாட்டிலேயே சிறந்த சிறு விமான நிலையங்களில் அதிக லாபம் ஈட்டக் கூடியதாக இருக்கிறது. எனவே, தனியார் நிறுவனம் இந்த விமான நிலையத்தை வாங்கி விட்டனர். திருச்சி விமான விரிவாக்கத்திற்காக, எங்களிடம் இருக்கும் இடத்தை கொடுக்க தயாராக இருக்கிறோம். மத்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான இடம் வேண்டுமானால், அதை அந்த தனியாரே கேட்டு வாங்கிக் கொள்வார்கள்” எனக் கூறினார்.

இந்நிகழ்வின் போது, அமைச்சர் கே.என்.நேருவுடன் ஆட்சியர் சிவராசு, மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் நாராயணசாமி, சேலம் எம்எல்ஏ பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் உள்ளிட்டோர் இருந்தனர்.

இதையும் படிங்க: இந்தி பேசுபவர்கள் தமிழ்நாட்டில் பானிபூரி விற்கிறார்களா ? - அமைச்சர் பொன்முடி விளக்கம்

Last Updated :May 14, 2022, 3:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.