Jallikattu: சூரியூர் ஜல்லிக்கட்டில் காளை மோதியதில் பார்வையாளர் பலி!

author img

By

Published : Jan 16, 2023, 4:12 PM IST

Updated : Jan 16, 2023, 4:38 PM IST

பார்வையாளர் பலி

Jallikattu: திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டில் காளை மோதியதில் பார்வையாளர் உயிரிழந்தார். காளை முட்டியதில் படுகாயம் அடைந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த அரவிந்த், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

களைகட்டிய சூரியர் ஜல்லிக்கட்டு விழா

Jallikattu: திருச்சி: சூரியர் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வந்த பார்வையாளர் மாடு முட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்த சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியில் அருகிலுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த 400 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்டப் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் பங்கேற்றன. திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கொடியசைத்து ஜல்லிக்கட்டுப் போட்டியை துவக்கி வைத்தார்.

ஒவ்வொரு சுற்றிலும் காளையை அடக்க வீரர்கள் ஆர்வம் காட்டினர். வீரர்கள் காளையை அடக்குவதையும், காளைகள் வீரர்களை ஓடவிடுவதையும் காண கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் குவிந்தனர். போட்டியை முன்னிட்டு திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் தலைமையில் ஏறத்தாழ 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

மதியம் 2 மணி வரை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்ற நிலையில், காளைகளை அடக்கி ஆண்ட காளையர்களுக்கும், கிடுக்குப்பிடி கொடுத்து தப்பிய காளைகளுக்கும் பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. காளைகள் மோதியதில் வீரர்கள் பலர் காயமடைந்தனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண வந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் மாடு முட்டியதில் படுகாயம் அடைந்தார்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அரவிந்த் திருச்சி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதிலும் பலனளிக்காமல் அரவிந்த் பரிதாபமாக உயிரிழந்தார். 25 வயதான அரவிந்த், ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வந்த நேரத்தில் காளை முட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பாலமேடு ஜல்லிக்கட்டில் காளை தாக்கியதில் வீரர் உயிரிழப்பு

Last Updated :Jan 16, 2023, 4:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.