அரசு மருத்துவர்கள் ஊழியர்கள் அலட்சியத்தால் சிசு மரணம்? ஆம்பூரில் மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்!

author img

By

Published : Jan 25, 2023, 7:10 AM IST

திருப்பத்தூரில் பிளாஸ்டிக் பையில் உயிரிழந்த சிசுவை வைத்து உறவினர்கள் போராட்டம்!

திருப்பத்தூரில் முறையான மருத்துவ ஆலோசனை வழங்காததால் கருவிலே குழந்தை இறந்ததாகக் கூறி, உயிரிழந்த சிசுவை பிளாஸ்டிக் பையில் வைத்துக் கொண்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பத்தூரில் பிளாஸ்டிக் பையில் உயிரிழந்த சிசுவை வைத்து உறவினர்கள் போராட்டம்!

திருப்பத்தூர்: ஆம்பூர் கம்பிக்கொல்லையைச் சேர்ந்தவர் விஜய். இவருடைய மனைவி பாக்கியலட்சுமி. பாக்கியலட்சுமி 9 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதனால் அவர் கடந்த 9 மாதங்களாக ரெட்டித்தோப்பு நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையத்தில் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனை செய்து வந்துள்ளார். அதேபோல் நேற்றும் (ஜன.24) வழக்கம்போல் ரெட்டித்தோப்பு நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், குழந்தை நன்றாக இருப்பதாகக் கூறியுள்ளனர். ஆனால் வயிற்றில் எவ்வித அசைவும் இல்லையெனக் கூறிய பாக்கியலட்சுமி, தனது குடும்பத்தினருடன் வாணியம்பாடி அரசு மருத்துவனைக்குச் சென்றுள்ளார். அங்குக் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பாக்கியலட்சுமிக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், குழந்தையை இறந்த நிலையில் மீட்டுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், ஆம்பூர் ரெட்டித்தோப்பு நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையத்தில் பாக்கியலட்சுமிக்கு முறையான மருத்துவ ஆலோசனை வழங்கவில்லை என கூறி, உயிரிழந்த 9 மாத சிசுவின் உடலை பிளாஸ்டிக் பையில் வைத்துக்கொண்டு ஆரம்பச் சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். அதேபோல் ஆம்பூர் - நாயக்கனேரி சாலையில் அமர்ந்து சாலை மறியில் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனிடையே இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மற்றும் ஆம்பூர் வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறையினர், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக அலுவலர்கள் உறுதியளித்தனர்.

இதனையடுத்து சாலை மறியலைக் கைவிட்ட அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் 24 மணி நேரமும் இயங்க வேண்டிய ஆரம்பச் சுகாதார நிலையம், மாலை 7 மணியளவில் மூடப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதையும் படிங்க: கொள்ளையடிக்கிறதுலேயும் ஒரு நியாயம் வேணாமா? - யூரியா உரத்தை ஹெராயின் என விற்க முயன்ற நபர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.