திருப்பத்தூர்: வாணியம்பாடி மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் கட்டட தொழிலாளி சங்கர். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு இரண்டு ஆண், இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். சங்கர், தொடர்ந்து குடித்துவிட்டு மனைவி, பிள்ளைகளிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
வழக்கம்போல் இன்று (ஆக.22) குடிபோதையில் வீட்டிற்கு வந்த சங்கர், மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வீட்டிலிருந்த உருட்டுக்கட்டையால் மனைவியின் தலையில் தாக்கியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விஜயலட்சுமியை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டிற்கு தீ வைப்பு
பின்னர், போதையில் இருந்த சங்கர் வீட்டிலுள்ள சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்களை தீ வைத்து எரித்துள்ளார்.
இதனால் வீடு முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸ் விசாரணை
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி தீயணைப்பு துறையினர், சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தலைமறைவாக இருக்கும் சங்கரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: டெல்லி உணவகத்தில் தீ விபத்து - இரண்டு பேர் உயிரிழப்பு