ரூ. 6 லட்சம் கடனுக்கு ரூ. 3 கோடி வட்டிகட்டிய பெண்.. கோவில்பட்டியில் கந்துவட்டி கும்பலின் வசூல் வேட்டை!

author img

By

Published : Sep 16, 2021, 3:01 AM IST

kovilpatti-usury-intrest-women-paid-3-crore-credit-for-6-lack-rupees

கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூர் பகுதியில் ரூ. 6 லட்சம் கடனுக்காக 3 கோடி ரூபாய் வட்டி கட்டிய பெண் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.

தூத்துக்குடி : கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூர் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மனைவி பிரவீனா(30). கண்ணன் வெளிநாட்டில் வேலை பார்த்துவருகிறார். பிரவீனா கடம்பூரில் உள்ள தனது தந்தை நாராயணன் வீட்டில் இருந்துவருகிறார். பிரவீனா தூத்துக்குடியைச் சேர்ந்த சௌந்தரராஜன் என்பவருடன் இணைந்து பழைய வாகனங்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்துவந்துள்ளார்.

தனது தொழில் வளர்ச்சிக்காக கடந்த 2016ஆம் ஆண்டு கயத்தாரில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்திவரும் முருகனிடம் இருந்து 4 லட்சம் ரூபாய் பணம் வாங்கியுள்ளார். முதலில் ஆறு பைசா வட்டி கொடுத்த வந்த அவர், மீண்டும் இரண்டு லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதற்கும் வட்டி கட்டிவந்தநிலையில், 10 பைசா வட்டி கொடுக்க முருகன் வற்புறுத்தியுள்ளார்.

kovilpatti-usury-intrest-women-paid-3-crore-credit-for-6-lack-rupees
கைது செய்யப்பட்ட மூவர்

வேறு வழியில்லாமல் பிரவீனா கொடுக்கத்தொடங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் தொழில் முடக்கம் ஏற்பட பிரவீனா வட்டி கொடுக்கமுடியாமல் தவித்துள்ளார். முருகன் வேறு நபரை கைகாட்டி அவரிடம் பணம் பெற்று தனது வட்டியை அடைக்கவேண்டும் எனக்கூறியுள்ளார்.

இக்கட்டான சூழ்நிலையில் தவித்த பிரவீனா, முருகன் கைகாட்டிய நபரிடம் கடன் பெற்று வட்டியை கட்டிவந்துள்ளார். முருகனிடம் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதற்காக அடுத்தடுத்து 48 பேரிடம் இதுபோல் பிரவீனா வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். நாள்வட்டி, வார வட்டி, மாத வட்டி என பல்வேறு வகையில், பணம் கொடுத்தவர்கள் பிரவீனாவிடம் பணத்தை பெற்றுவந்துள்ளனர்.

வெளியில் சொன்னால், அவமானம் ஏற்படுமோ, வட்டிக்கு கொடுத்தவர்கள் தங்களை ஏதாவது செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தில், வெளியே செல்லமுடியாமல் பரிதவித்து வந்த பிரவீனா, தன்னுடைய 100 பவுன் நகைகள், தனது தாயின் 40 பவுன் நகைகளை விற்பனை செய்தும், தனது தந்தையின் சேமிப்பு பணம் ரூ. 20 லட்சம், தனது சகோதரனனின் ரூ. 19 லட்சம் ஆகிவற்றையும் வட்டிப்பணத்திற்காக கொடுத்துள்ளார். இப்படி 16 லட்சம் ரூபாய் கடனுக்காக 3 கோடி ரூபாய் வரை அவர் வட்டிகட்டியுள்ளார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கந்துவட்டி கும்பல்

இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலரும் பிரவீனாவிற்கு கடன் கொடுத்துள்ளதால், அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பிரவீனாவை மிரட்டியுள்ளனர். பிரவீனாவுக்கு ஆதரவாக இருந்த, அதே ஊரைச் சேர்ந்த சரண்யா, ராணி, அந்தோணி ஆகியோரையும் கந்துவட்டி கும்பல் மிரட்டத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், பிரவீனா, சரண்யா, ராணி உள்ளிட்டோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் ஆகியோரிடம் புகார் மனு அளிக்க, இதுகுறித்து உடனே விசாரிக்க கடம்பூர் காவல்நிலையத்திற்கு எஸ்பி உத்தரவிட்டார்.

இதையடுத்து கடம்பூர் காவல் நிலைய காவலர்கள், பிரவீனாவை மிரட்டிய, முருகன், மகாராஜா, கிருஷ்ணம்மாள், குருவம்மாள், செல்வராணி, செல்வி, சிவசக்திராமன், சிவசக்தி, ராஜா, கங்கா, ராஜேஸ் கண்ணா, தேன்ராஜா, ராம்குமார், ராஜா ஆகிய 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்து காவல் நிலைய ஜாமீனில் இவர்களை விடுவித்தனர். இதில், சிவசக்தி என்பவருடைய கணவர் நாராயணன் காவலராகப் பணிபுரிந்துவருகிறார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோ

இதற்கிடையில், கடந்த வெள்ளிக்கிழமை இவ்வழக்கு தொடர்பா முருகனை காவலர்கள் கைது செய்தனர். இந்தச்சூழ்நிலையில், வழக்கினை வாபஸ் பெற வலியுறுத்தி தனக்கு தெடார் மிரட்டல் வருவதாகவும், வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் தனக்கு இருப்பதாக பிரவீனா பேசி வெளியிட்ட வீடியோ, பிரவீனாவில் சகோதரர் வெளியிட்ட ஆடியோ வைரலாகப் பரவியது. இதனையடுத்து தேன்ராஜா, ராஜா ஆகிய இரண்டுபேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இவ்வழக்கில், தற்போது வரை மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள காவலர் மனைவி சிவசக்தி உள்ளிட்ட 11 பேரை காவல்துறையினர் தேடிவருகின்றனர். இதுதவிர பிரவீனா வீட்டுப்பகுதியில் காவலர்கள் அடிக்கடி ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதையும் படிங்க: கந்துவட்டி கொடுமை: நடிகை ஜெயலட்சுமி மீது புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.