ஜெயலலிதா இருந்திருந்தால் எடப்பாடியை துப்பாக்கியால் சுட்டிருப்பார் - அமைச்சர் கீதா ஜீவன்

author img

By

Published : Jan 26, 2023, 9:10 AM IST

அமைச்சர் கீதா ஜீவன்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் எடப்பாடி பழனிசாமியை துப்பாக்கியால் சுட்டு கொன்றிருப்பார் என அமைச்சர் கீதா ஜீவன் சாடியுள்ளார்.

பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன்

தூத்துக்குடி: வடக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளரும், மாநகராட்சி மண்டல தலைவருமான பாலகுருசாமி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், திமுக தீர்மானக் குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான வெங்கடாபதி மாநில பேச்சாளர் துறையூர் துரைபாண்டி உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

அப்போது பேசிய அமைச்சர் கீதா ஜீவன், "நாம் அனைவரும் தமிழனாக ஒன்றிணைய வேண்டும் என்ற வகையில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, காமராஜர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் பாடுபட்டார்கள். இதன் காரணமாக தான் தமிழ்நாடு இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக இருந்து வருகிறது.

கல்வி வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, சமூக நீதி என அனைத்திலும் சிறந்து விளங்குகிறது. இதற்கு காரணம் மொழியை காக்கவும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் தமிழன் வளர வேண்டும் என்ற வகையில் தலைவர்களின் வழியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார்.

இனமான உணர்வுடன் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். முன்னதாக அதிமுக கட்சியினர் அடிமை ஆட்சி நடத்தி வந்தனர். சசிகலா அம்மா போட்ட பிச்சையில் எடப்பாடி முதலமைச்சர் ஆனார். இது அனைவருக்கும் தெரியும், ஆனால் அந்த அம்மாவுக்கு எப்படி மரியாதை கொடுத்தீங்க என்றும் தெரியும்.

ஒன்றிய அரசு சொல்லுவதற்கேல்லாம் தலையை ஆட்டினார். உங்கள் குடுமி ஒன்றிய அரசின் மோடி கையிலிருந்தது. சட்டசபையில் ஆளுனருக்கு எதிராக, தமிழ்நாடு என்ற தீர்மானம் கொண்டு வரும் போது எடப்பாடி பழனிச்சாமி வெளியே ஓடிவிட்டார். ஏன் நின்று இருக்க வேண்டியதுதானே, புரட்சித்தலைவர் இதைத்தான் சொல்லி கொடுத்தாரா? ஜெயலலிதா அம்மா இதைத்தான் சொல்லிக் கொடுத்தாரா? அந்த அம்மா இருந்திருந்தால் எடப்பாடியைச் சுட்டுக் கொன்று இருப்பார்.

அண்ணாவின் பெயரைத் தாங்கியுள்ள அதிமுக, அண்ணா வைத்த பெயரை மாற்றுவதற்கு ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. திமுக வை பற்றி பேசும் தகுதி உங்களுக்கு இல்லை” எனப் பேசினார். இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் உட்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: அமைச்சர் நாசரின் செயல் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்: CM-க்கு ஓபிஎஸ் கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.