இரவில் நீக்கம்; காலையில் இணைப்பு.. பாஜகவில் நடப்பது என்ன?

author img

By

Published : Mar 16, 2023, 12:20 PM IST

Updated : Mar 16, 2023, 1:48 PM IST

Etv Bharat

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்த விவகாரத்தில் நேற்று இரவு ஆறு மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக இளைஞர் அணி தலைவர் தினேஷ் ரோடி இன்று காலையில் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி: தமிழ்நாடு பாஜகவில் அண்மைக் காலமாக பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகியதோடு தங்களை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர். இந்த விவகாரம் பாஜக - அதிமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு இருகட்சி மூத்த நிர்வாகிகள் சிலர் பரஸ்பரம் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வந்தனர். பாஜகவினர் சிலர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் எதிர்மறை கருத்துக்களை பதிவிட்டனர். அதிலும் சிலர் ஒருபடி மேலே சென்று உருவ பொம்மை, புகைப்படத்தை எரிப்பது என புதுபுது வடிவில் போராட்டங்கள் நடத்தினர்.

அந்த வகையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடி கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞரணியினர் சிலருடன் இணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, அவரது புகைப்படத்தை எரித்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார். இந்த விவகாரம் தூத்துக்குடி மாவட்ட அதிமுகவினரை கடுப்பில் ஆழ்த்தியது.

இந்நிலையில் புதன்கிழமை இரவு தூத்துக்குடி மாவட்ட பாஜக தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "கூட்டணி தர்மத்தினை மீறி பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைப்பதை கண்டித்து, முன்னாள் முதல்வர் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து கடந்த 7-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பாரதிய ஜனதா கட்சி வடக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் தினேஷ் ரோடி தலைமையில் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்சியின் கொள்கைக்கும், குறிக்கோள்களுக்கு முரணாக செயல்பட்டதால் கட்சியின் நிலைப்பாட்டை மீறி தன்னிச்சையாக செயல்படுவதாலும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடி தற்போது வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்து 6 மாத காலத்திற்கு விலக்கி வைக்கப்படுகிறார்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனிடையே, இன்று காலை பாஜக மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் மாவட்ட இளைஞர் அணித் தலைவர் பொறுப்பிருந்து தினேஷ் ரோடியை ஆறு மாதம் விடுவித்த அறிவிப்பு உடனடியாக ரத்து செய்யப்படுகிறது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பொறுப்பில் தினேஷ் ரோடி தொடர்ந்து செயல்படுவார்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இரவில் நீக்கம், காலையில் மீண்டும் இணைப்பு என தூத்துக்குடி மாவட்ட பாஜகவில் அதிரடி நடவடிக்கைகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:"வாத்தியாருங்க லட்சணம் தெரியும்.. உங்க வீடா இருந்தா இப்படி செய்வீங்களா?" அரசு பள்ளியில் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவேசம்!

Last Updated :Mar 16, 2023, 1:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.