‘காவிரி டெல்டா மாவட்டங்கள் போராட்ட களமாக மாறும்’ - பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை

author img

By

Published : Aug 8, 2021, 11:53 AM IST

செய்தியாளர்களைச் சந்தித்த பிஆர் பாண்டியன்

தமிழ்நாடு அரசு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அழுத்தம் கொடுத்து தண்ணீரை பெற்றுதர வேண்டும் இல்லையேல் காவிரி டெல்டா மாவட்டங்கள் போராட்ட களமாக மாறும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் கச்சனம், ஆலத்தம்பாடி, விளக்குடி, மணலி, பொன்னிறை, நாகை மாவட்டம் திருக்குவளை, கொக்கலடி உள்ளிட்ட கிராமங்களில் குறுவை பயிர்கள் தண்ணீரின்றி கருகுவதை நேற்று (ஆகஸ்ட் 07) தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மேட்டூர் அணை திறக்கப்பட்டதை நம்பி சுமார் 3.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒரு லட்சம் ஏக்கரில் சாகுபடி பணிகளை முழுமையாக தொடர முடியாமல் முடங்கியுள்ளது. வரும் காலத்தில் முற்றிலும் குருவை கருகி அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சாகுபடி அழிந்து போகும்

சம்பா சாகுபடியை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் செய்வதறியாது பரிதவிக்கின்றனர். இந்நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்னதாக காவிரி மேலாண்மை ஆணைய தலைவரை டெல்லியில் நேரில் சந்தித்து கர்நாடக அணைகளை, ஆணையத் தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய தண்ணீரை பெற்றுத்தர வேண்டும் இல்லையேல் தமிழ்நாட்டில் சாகுபடி அழிந்து போகும் என்று எடுத்துக் கூறினேன்.

அரசுக்கு எச்சரிக்கை

உடனடியாக சென்று பார்வையிட்டு ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்கான தண்ணீரை பெற்றுத் தருவதாக உறுதியளித்தார். இதுவரையிலும் அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால், தமிழ்நாடு மிகப்பெரிய பேரழிவை சந்திக்கப் போகிறது.

குருவை கருகி வரும் நிலையில் சம்பா சாகுபடி 13 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ள முடியாத முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பிற்கு முழுமையும் காவிரி மேலாண்மை ஆணையம் பொறுப்பேற்க வேண்டும் என நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

செய்தியாளர்களைச் சந்தித்த பிஆர் பாண்டியன்

உடனடியாக கர்நாடகாவிடம் உரிய தண்ணீரை ஆணையத் தலைவர் பெற்றுத்தர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உரிய அழுத்தத்தைக் கொடுத்து தண்ணீரை பெற்றுதருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் காவிரி டெல்டா போராட்ட களமாக மாறும்” என எச்சரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: பட்டு வளர்ச்சித் துறை அலுவலர்கள் முறைகேடு?: விவசாயிகள் முற்றுகை போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.