அண்ணாமலைக்கு அஞ்சியதா திமுக...? - திருவாரூர் வீதிக்கு கருணாநிதி பெயர் சூட்டும் வைபவம் நிறுத்தம்..!

author img

By

Published : May 14, 2022, 7:26 PM IST

அண்ணாமலை

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூரில் பிரமாண்ட ஆர்ப்பாட்டத்தை அண்ணாமலை நடத்திய சூடு குறைவதற்குள் , கருணாநிதி பெயரை திருவாரூர் தெற்கு வீதிக்கு சூட்டுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நேரு அறிவித்திருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

அண்ணாமலையின் ஆர்ப்பாட்டத்தால் அதிர்ந்த திருவாரூர் : அரசியல் வட்டாரத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படுவது திருவாரூரில் கடந்த 12ம் தேதி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நடத்திய போராட்டம் குறித்து தான். திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு கருணாநிதி சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டு , அண்மையில் திருவாரூர் நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆசிய அளவில் புகழ்பெற்ற திருவாரூர் தேரோடும் வீதிக்கு நாத்திகரான கருணாநிதி பெயரை சூட்டுவதா களமிறங்கியது பாஜக. கடந்த 12ம் தேதி திருவாரூர் தெற்கு வீதியில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நாள் குறிக்கப்பட்டது. திமுகவின் கோட்டையாக விளங்கும் டெல்டா மண்டலத்தில், அதுவும் கருணாநிதியின் சொந்த ஊரில் பாஜகவுக்கு அன்று கூடிய கூட்டம் பலரின் புருவங்களையும் உயர வைத்தது. சமூக ஊடகங்களில் இன்று வரை பேசுபொருளும் அண்ணாமலை நடத்திய கூட்டம்தான்.

திருவாரூர் பாஜக ஆர்ப்பாட்டம்
மே12ஆம் தேதி திருவாரூரில் பாஜக நடத்திய ஆர்ப்பாட்டம்

திருவாரூர் தேரோடும் வீதி குறுகியது என்றாலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை திரண்டிருந்த கூட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. போட்டோஷாப் கூட்டம் என்றவர்கள் கூட, உண்மையை உணர்ந்து கொள்ள சிறிது நேரம் பிடித்தது. கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தெற்கு ரத வீதிக்கு கருணாநிதி பெயரை வைத்தால் கலெக்டரை செயல்பட விடமாட்டோம் என எச்சரித்தார்.

அண்ணாமலை
மே 12 ம் தேதி திருவாரூரில் அண்ணாமலை நடத்திய கூட்டம்

ரூ.500க்கு கூடிய கூட்டமா?: திமுக தலைவர் கருணாநிதி பிறந்த ஊரில் பாஜகவிற்கு பெருந்திரளாக கூட்டம் கூடியது குறித்து உள்ளூர் திமுக பிரமுகர்களிடம் விசாரித்தோம். நன்னிலம் திமுக ஒன்றிய செயலாளர் கோ.ஆனந்த கூறுகையில் திருவாரூர் எப்போதும் திமுகவின் கோட்டை தான். கடந்த 12ம் தேதி கூடிய கூட்டமும் பாஜகவின் தனி செல்வாக்கு இல்லை. கூட்டணி கட்சியினர் அனைவரையும் சேர்த்து தான் இப்படி பெரிய கூட்டத்தை திரட்டியிருக்கின்றனர் என்றார். பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் மற்றும் கிராமப்புற மக்கள் அனைவருக்கும் தலைக்கு 500 ரூபாய் கொடுத்து மக்கள் கூட்டத்தை அழைத்து வந்துள்ளனர். மக்களை திசை திருப்ப முயலும் இந்த கூட்டத்தை எல்லாம் பார்த்து நாங்கள் பயப்பட போவதில்லை.பாஜக வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இல்லை என கூறினார்.

அண்ணாமலை
மே 12 ம் தேதி திருவாரூரில் அண்ணாமலை நடத்திய கூட்டம்

பாஜகவின் திடீர் செல்வாக்கு எப்படி?: திமுகவின் குற்றச்சாட்டை மறுக்கும் பாஜக மாவட்ட செயலாளர் ராகவன் நாங்கள் எதிர்பார்த்ததை விட டெல்டா மாவட்டங்களில் இருந்து இளைஞர்கள் அதிகளவில் வருகை தந்திருந்தனர் என்றார். திருவாரூர் மாவட்டம் கலைஞரின் மாவட்டம் அதுவும் திருவாரூர் சட்டமன்ற தொகுதி கருணாநிதி போட்டியிட்டு வென்ற தொகுதி. மாவட்டம் முழுவதும் 4 சட்டமன்ற தொகுதிகளில் 3 தொகுதிகளை திமுக தான் வென்றுள்ளது. ஒரு தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் நாங்கள் டெல்டா மாவட்டங்கள் முழுவதையும் ஒன்றிணைப்பதற்காக பாஜக மாநிலத் துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் அவர்களின் தலைமையில் என்னுடைய ஒருங்கிணைப்பில் தான் இந்த டெல்டா மாவட்ட மக்களை ஒன்று சேர்த்து கூட்டம் கூட்டினோம். இந்த கூட்டத்தில் அதிக அளவில் இளைஞர்கள் தான் வந்திருந்தனர் நாங்கள் இந்த அளவிற்கு கூட்டம் வரும் என எதிர்பார்க்கவில்லை நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே வந்துள்ளனர் இதை பார்க்கும்போது பாஜக தமிழகத்தில் வளர்ந்து கொண்டு வருகிறது என்ற எண்ணம் எங்களுக்குள் உருவாகியுள்ளது இந்த கூட்டத்தில் பத்தாயிரத்துக்கும் மேல் கூடியிருந்தனர் இந்த கூட்டத்தை பார்த்த உடனே ஆளுங்கட்சிக்கு ஒரு ஆட்டத்தை கொடுத்திருக்கும். என நம்பிக்கை பொங்க கூறுகிறார்.

பின்வாங்குகிறதா தமிழக அரசு?: இதனிடையே திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு , முதலமைச்சர் ஸ்டாலின் திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு கருணாநிதியின் பெயர் வைக்கும் முடிவினை நிறுத்தி வைக்க சொல்லி இருப்பதாக கூறினார். அதே சமயம் அண்ணாமலை தேவையின்றி சில விஷயங்களை பேசுவதாகவும் , எந்த தனிநபரும் அரசு அலுவர்களின் பணியை தடுத்தால் வழக்குகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.

அமைச்சர் நேரு
அமைச்சர் கே.என்.நேரு

ஆதீனப் பட்டினப்பிரவேசத்திலும் சரி தற்போது கருணாநிதியின் பெயர் சூட்டும் தீர்மானம் உள்ளிட்ட பல விஷயங்களில் சரி திமுக அரசின் நடவடிக்கைகள், ஒத்த சித்தாந்தம் உடைய திராவிடர் கழகம் மற்றும் கூட்டணி கட்சிகளாலும் விமர்சிக்கப்படுகிறது. இதே போன்று இதுவரை சிக்சர்களாக பாராட்டுக்களையே பெற்று வந்த மு.க.ஸ்டாலின் அரசு, ராஜா அண்ணாமலைபுரம் ஆக்கிரமிப்பு அகற்றம், அரசு ஊழியர் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்டவற்றிலும் கசப்பான விமர்சனங்களை எதிர்நோக்குகிறது. கசப்பை உவப்பான மருந்தாக்கும் வித்தை திமுகவுக்கு கைவருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: கருணாநிதி பெயர் சூட்டும் தீர்மானம் நிறுத்தம்..! அது அண்ணாமலைக்கு தெரியாது..- அமைச்சர் சொன்ன சேதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.