தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் சம்பா தாளடி பயிர்கள் முழுவதும் சேதமடைந்துள்ளன.
இதில் குறிப்பாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாள்களாக மழை நின்றிருந்த நிலையில் விவசாயிகள் ஏற்கனவே பெய்து வந்த கனமழையால் சேதமடைந்த நெற்பயிர்களை மறு நடவு செய்திருந்தனர்.
இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி திருவாரூர் மாவட்டத்தில் 10 செ.மீ., மழை பதிவாகியிருந்த நிலையில் மாவட்டம் முழுவதும் தொடங்கிய கனமழையானது விடிய விடிய பெய்ததால் நன்னிலம், குடவாசல், வலங்கைமான், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர், ஆண்டிப்பந்தல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மறு நடவு செய்திருந்த சம்பா தாளடி நெற்பயிர்கள் முழுவதும் மீண்டும் மழைநீரில் முழ்கி சேதமடைந்தன.
மேலும், ஏக்கருக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை செலவு செய்தும் இந்த கனமழையால் முற்றிலும் அழிந்து சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே விவசாயிகள் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு சம்பா தாளடிக்கான ஏக்கருக்கு 20 ஆயிரம் நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சாலையில் தேங்கி நிற்கும் மழை நீர்: அவதியில் மக்கள்