குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு.. பிச்சை எடுத்து விவசாயிகள் நூதன போராட்டம்!

author img

By

Published : May 20, 2023, 12:26 PM IST

குப்பை கிடங்கு அமைக்க எதிர்த்து 17 நாட்களாக நூதன போராட்டம்

திருவண்ணாமலையில் சுகாதார சீர்கேட்டிற்கு வழிவகுக்கும், குப்பை கிடங்கு அமைப்பதை கண்டித்து கிராம மக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பசுமை மரக்கிளைகளுடனும், திருவோடு பாத்திரத்தை கையில் ஏந்தி பிச்சை எடுத்தும் கிராம மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குப்பை கிடங்கு அமைக்க எதிர்த்து 17 நாட்களாக நூதன போராட்டம்

திருவண்ணாமலை: நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் தற்போது திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தின் அருகே உள்ள குப்பை கிடங்கில் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதாலும் நகரின் மையப் பகுதியில் உள்ளதாலும் இந்த குப்பைக் கிடங்கை இடம் மாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்தது.

அதன் படி திருவண்ணாமலை அருகே உள்ள தேவனந்தல் பகுதியில் சுமார் 6 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் புனல் காடு மலைக்குன்று அடிவாரப் பகுதிகளை அழித்து குப்பை கிடங்கு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு தேவனந்தல், புனல் காடு, கலர் கொட்டா உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொது மக்கள் அங்கே குப்பை கிடங்கை அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் புனல் காடு பகுதியில் குப்பை கிடங்கை அமைக்க மாவட்ட நிர்வாகம் நிலத்தை சமம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 16 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களுடன் தற்போது விவசாய சங்கமும் இணைந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

இந்த குப்பை கிடங்கு அமைக்கப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் மற்றும் விவசாயம், குடிநீர், நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்று குப்பை கிடங்கினால் இந்த பகுதியில் உள்ள பசுமை மரங்கள் அழிந்து நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தாங்கள் பிச்சை எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம் என்று கிராம மக்கள் குப்பை கிடங்கு அமைக்கப்படுவதை எதிர்த்து கைக்குழந்தைகளுடன் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், தங்களது கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் குப்பை கிடங்கு அமைப்பதை கைவிட வேண்டும் என்றும், இல்லை என்றால் தாங்கள் போராட்ட இடத்திலேயே தங்கி சமைத்து, உண்டு, உறங்கி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாய சங்கத்தினர் மற்றும் கிராம மக்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் போராட்டத்தின் 17வது நாளான நேற்று சம்பந்தபட்ட இடத்தில் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டால் விவசாயிகள் மற்றும் பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறினர்.

மேலும், பசுமை மரங்களை இழந்து அதன் மூலம் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதையும் வாழ்வாதாரம் பாதித்தால் கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் நிலைக்கு தங்கள் தள்ளப்படுவோம் என்பதையும் உணர்த்தும் விதமாக பசுமை மரக்கிளைகளுடன் திருவோடு பாத்திரத்தை கையில் ஏந்தி பிச்சை எடுப்பது போல் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களது கோரிக்கையை ஏற்று இந்தப் பகுதியில் குப்பை கிடங்கு அமைக்கும் வேலையை மாவட்ட நிர்வாகம் கைவிட தவறினால் இதுப் போன்று தொடர் போராட்டத்தில் தாங்கள் ஈடுபடுவோம் என்று விவசாய சங்கத்தினர் மற்றும் கிராம மக்கள் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க: 9 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கொலை வழக்கு குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் கைது!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.