குப்பைக் கிடங்கு அமைக்க எதிர்ப்பு.. மக்களின் தொடர் போரட்டத்திற்கு பாஜக ஆதரவு!

author img

By

Published : May 17, 2023, 9:49 AM IST

குப்பைக் கிடங்கு அமைக்க எதிர்ப்பு.. மக்களின் தொடர் போரட்டத்திற்கு பாஜக ஆதரவு

திருவண்ணாமலையில் குப்பைக் கிடங்கு அமைப்பதைக் கண்டித்து 10 நாட்களுக்கும் மேலாக கிராம மக்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவதற்கு பாஜக ஆதரவு அளித்துள்ளது.

திருவண்ணாமலையில் குப்பைக் கிடங்கு அமைப்பதை கண்டித்து 10 நாட்களுக்கும் மேலாக கிராம மக்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவதற்கு பாஜக ஆதரவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள், தற்போது திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தின் அருகில் உள்ள குப்பைக் கிடங்கில் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதாலும், நகரின் மையப் பகுதியில் உள்ளதாலும், இந்த குப்பைக் கிடங்கை இடம் மாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்தது.

இதன் அடிப்படையில், திருவண்ணாமலை அருகே உள்ள தேவனந்தல் பகுதியில் சுமார் 6 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில், மலைக்குன்று அடிவாரப் பகுதிகளில் அரசின் குப்பைக் கிடங்கை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு தேவனந்தல், புனல் காடு மற்றும் கலர் கொட்டா உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், குறிப்பிட்ட இடத்தில் குப்பைக் கிடங்கை அமைக்கக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, கடந்த 10 நாட்களாக புனல் காடு பகுதியில் குப்பைக் கிடங்கை அமைக்க மாவட்ட நிர்வாகம் நிலத்தை சமன் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் தொடர்ந்து பத்து நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தற்போது போராடும் கிராம மக்கள் உடன் விவசாய சங்கம் இணைந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டால் தங்களது வாழ்வாதாரம், விவசாயம், குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் ஆகியவை பெருமளவில் பாதிக்கப்படும் என்று கிராம மக்கள் குப்பைக் கிடங்கு அமைக்கப்படுவதை எதிர்த்து கைக்குழந்தைகளுடன் போராட்ட இடத்தில் சமைத்து உண்டு, அங்கேயே தூங்கி தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கிராம மக்கள் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கம் இணைந்து நடத்தி வரும் காத்திருப்பு போராட்டத்தில், பாரதிய ஜனதா கட்சியும் இணைந்துள்ளது. குறிப்பாக, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் கே.ஆர்.பாலசுப்ரமணியன் தலைமையில், புனல் காடு பகுதியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்புகளுக்கு எதிராக குப்பைக் கிடங்கு அமைக்கும் பணிகளை மாவட்ட நிர்வாகம் கைவிடக் கோரி நேற்று (மே 16) அந்த பகுதியில் அக்கட்சியினர் ஒன்று திரண்டனர்.

மேலும், குப்பைக் கிடங்கை அமைக்கக் கூடாது என தொடர்ந்து போராடி வரும் மக்களுக்கு ஆதரவாக தற்போது பாஜகவும் இணைந்துள்ளதாகவும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் குப்பைக் கிடங்கு அமைக்கும் பணிகளை மாநில தலைமையின் உத்தரவின் பெயரில் தாங்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றும், மக்களுக்கு ஆதரவாக தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: குப்பைக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு: ஜேசிபி இயந்திரம் சிறைப்பிடிப்பு - பெண்கள் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.